"தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனையை பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க முயற்சி".. திருமாவளவன் காட்டம்
மதுரை: "தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதைவிட, இந்தப் பிரச்சனையை பயன்படுத்தி திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதே சிலரின் நோக்கம். இதை வைத்து அரசியல் செய்வது அற்பமான அணுகுமுறை" என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இருப்பதால் இதில் அமைதியாக இருந்து விடுவோமா? தூய்மை பணியாளர்களை தனியார்மயப்படுத்தியதே அதிமுக தான் என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

திருமாவளவன் பேட்டி
மதுரையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில், "வரி குறைப்பு என்ற பிரதமர் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜிஎஸ்டி முறையை முற்றிலும் கைவிட வேண்டும். இந்த அறிவிப்பு தேர்தலுக்காக இருந்தாலும் வரவேற்கலாம்.
சுதந்திர தின விழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பாராட்டுவது ஏற்புடையது அல்ல. ஆர்.எஸ்.எஸ். இந்து பெரும்பான்மை பேசி மக்களை பிரிக்கும் அமைப்பு. பிரதமர் ஒரு ஆர்.எஸ்.எஸ் தயாரிப்பு. அதனால் அவர் அப்படித்தான் பேசுவார்.
தூய்மைப் பணியாளர்கள் கைது விவகாரம்
தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. தூய்மை பணியாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், "அவர்கள் எல்லாம் தாமதமாக போராட்டத்திற்கு சென்றவர்கள். நான் போராட்டம் தொடங்கிய நான்காவது நாள் அவர்களைச் சந்தித்தேன். முதலமைச்சரிடம் பேசினேன். துறை சார்ந்த அமைச்சர்களிடம் பேசினேன். அவர்களோடு தொடர்பிலேயே இருந்தேன். நான் அமைச்சர்கள் கே.என் நேரு சேகர்பாபு, முதலமைச்சர் ஆகியோரை சந்தித்தும் தொடர்புடைய அரசு அதிகாரிகளை சந்தித்தும் பேசினேன். ஏதோ சில நிமிடங்கள் சந்தித்தவர்கள் எங்களை விமர்சிப்பது வேடிக்கையானது.
கூட்டணியை உடைக்க முயற்சி
தூய்மை பணியாளர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்பமான அணுகுமுறை. தூய்மை பணியாளர் பிரச்சனை என்பதை விட இதை வைத்து திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது தான் அவர்லளின் நோக்கமாக இருக்கிறது.
தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது முதன்மை கோரிக்கையாக இருக்க வேண்டும். தூய்மை பணியாளர்கள் தலித்களாக இருக்கிறார்கள். அதனால் திருமாவளவன் தான் பேச வேண்டும் என சொல்வதே சரியாக இருக்காது. எல்லோரும் இந்த பிரச்சனையை பேச வேண்டும்.
ஏன் 13 நாட்கள் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக அதிமுக போராட்டம் நடத்தவில்லை? கடைசியாக கைது செய்யப்பட்ட போதுதான் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவாக பேசினார். ஏன் அதிமுக ஆட்சியில் தூய்மைப் பணி தனியார் மயப்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் 15 மண்டலங்களில் 11 மண்டலங்கள் தூய்மை பணியாளர்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.
அதிமுக தான் ஆரம்பித்ததே
முதன் முதலில் அரசாணை 152 ஐ அமல்படுத்தியது அதிமுக தான். தனியார் வசம் தூய்மைப் பணியை ஒப்படைத்ததே அதிமுக தான். இதை திமுகவுக்கு ஆதரவாக சொல்லவில்லை உண்மையைச் சொல்லுகிறேன். ஏன் இப்போது போராட்டம் நடத்துபவர்கள் அதிமுக தனியார் மயப்படுத்தியதைப் பற்றி பேசவில்லை?
அதிமுக செய்தால் அமைதியாக இருக்க வேண்டும். திமுக செய்தால் எதிர்க்க வேண்டும்.. என்ன அரசியல் இது? இதுதான் நல்ல அணுகுமுறையா? திமுக கூட்டணியில் இருப்பதால் இதில் அமைதியாக இருந்து விடுவோமா? எங்களைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே தூய்மை பணியாளர் பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எடுத்துச் சொல்கிறோம்.. கோரிக்கை விடுக்கிறோம்.
தவெக தலைவர் விஜய் பனையூரில் தூய்மை பணியாளர்களை சந்தித்தது குறித்த கேள்விக்கு, "அவர் புதிய அணுகுமுறையை கையாளுகிறார். காலம் அவரை மக்களைச் சந்திக்க வைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications