திருப்பரங்குன்றம் தொகுதியை மார்க்சிஸ்ட் வசம் கொடுக்கும் திமுக.. வேட்பாளராக களமிறங்கும் ராஜேந்திரன்?
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் கொடுக்க மதுரை மாவட்ட திமுகவினர் ஆலோசித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திருப்பரங்குன்றம் தீப விவகாரம் காரணமாக அந்த தொகுதியை பாஜக குறி வைத்திருக்கும் சூழலில், திமுக நேரடியாக களமிறங்காமல் சிபிஎம் வசம் கொடுக்க ஆலோசித்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்மையில் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியது. திருப்பரங்குன்றம் மேல் இருக்கும் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றம் செல்ல முடிவு எடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இதனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் எந்தக் கட்சி போட்டியில் ஈடுபடும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அறுபடை வீடு முருகன் கோவில்களில் நேரடியாக களமிறங்க வேண்டும் என்று பாஜக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி கோயில் அமைந்துள்ள தொகுதிகள் திமுகவின் கோட்டையாகும்.
இதனால் அதிமுக எளிதாக விட்டுக் கொடுக்கும் என்று தெரிகிறது. ஆனால் திருப்பரங்குன்றம் மற்றும் பழமுதிர்ச்சோலை அமைந்துள்ள மேலூர் தொகுதி அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. இதனால் அதிமுக விட்டுக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தற்போது திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக ராஜன் செல்லப்பா இருந்து வருகிறார்.
இந்த முறை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால், அங்கு ராம சீனிவாசன் களமிறங்கக் கூடும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுக தரப்பில் நேற்று தனியார் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக வெற்றி முகத்தில் இருக்கிறது.
ஆனால் திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக பலமாக உள்ளது. இந்த முறை திருப்பரங்குன்றத்தில் திமுக நேரடியாக களமிறங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதுரை மாவட்ட திமுகவினர் திருப்பரங்குன்றம் தொகுதியை சிபிஎம் வசம் கொடுக்க ஆலோசித்திருக்கின்றனர். அதற்கு சிபிஎம் கட்சியினர் மதுரை மேற்கு தொகுதியை குறி வைத்ததே முக்கிய காரணம்.
ஒருவேளை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு திருப்பரங்குன்றத்தில் திமுக நேரடியாக களமிறங்க வேண்டும் என்று அறிவுறுத்தினால், திமுக தரப்பில் கிருத்திகா தங்கபாண்டியை தயார் செய்து வைத்திருக்கின்றனர். அதேபோல் சிபிஎம் கட்சிக்கு கொடுக்கப்பட்டால், அங்கு ராஜேந்திரன் போட்டியிட தயாராக பணிகளை மேற்கொண்டு வருவதும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications