'சில மனிதர்கள் சரியாக இல்லை' திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தம்.. மதுரை நீதிமன்றம் கருத்து!
மதுரை: 2 மாதங்களுக்கு முன்பாக மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி கொடுக்க இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அமைப்புகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த கண்ணன், முத்துகுமார் உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தனர்.
அதில், திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட திருப்பரங்குன்றம் கோயிலின் தென் பகுதியில் உமையாண்டார் குகை கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் உள்ளன. இந்த கோயிலில் எவ்விதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது.
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது.
மனுத்தாக்கல்
கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சார்பில் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இது சுப்பிரமணிய சுவாமி கோயிலின் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்தது. அதேபோல் திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடை விதிக்க கோரியும், திருப்பரங்குன்ற மலையை சமணர் குன்று மலை என அறிவிக்கக் கோரியும் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு முன்பாக இன்று வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஒற்றுமை
அதில், திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள 18ம் படி கருப்பசாமி கோயில், பாண்டி முனீஸ்வரர் திருக்கோயில் மற்றும் பிற கோயில்களில் கால்நடைகளை பலியிடும் வழக்கம் உள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து மதத்தினருக்கும் இடையே ஒற்றுமையை பேண விரும்புகிறது. அதன் அடிப்படையில் ஜனவரி 30ஆம் தேதி இரு சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையே கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் தர்காவிற்கு வருபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில் ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து அனைவருக்கும் பரிமாறி சாப்பிடுவர். திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும், தங்களின் நடைமுறையில் வெளிநபர்கள் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனவும் முடிவு செய்து தெரிவித்தனர்.
அனைத்து சமுதாயத்தினரின் வழக்கம்
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இதுபோல வேண்டுதல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து பரிமாறுவது வழக்கமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் தொல்லியல்துறை தரப்பில், வழக்கு தொடர்பாக பதில் மனுதாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
அதைத்தொடர்ந்து அரசுத்தரப்பில், திருப்பரங்குன்றம் மலை பகுதியில் எழுந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது என தெரிவிக்கப்பட்டது. அதனை தொல்லியல்துறை தரப்பில் ஏற்க மறுத்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை தொல்லியல்துறைக்கு சொந்தமானது என்பதால், அங்கு எதைச் செய்தாலும் தொல்லியல்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மனிதர்கள் சரியாக இல்லை
அதேபோல் மனுதாரர்கள் தரப்பில், இது தொடர்பாக கீழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை பிரைவசி கவுன்சில் உறுதி செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள் தான் சரியாக இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும், தொல்லியல் துறை திருப்பரங்குன்றம் மலை தங்களுக்கு சொந்தமானது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மலை அனைவருக்கும் சொந்தமானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், தொல்லியல்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவும், திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக உள்ள உத்தரவுகளைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications