திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல்குமார்.. அதிருப்தியில் தவெக! பின்னணியில் ராஜன் செல்லப்பா
மதுரை: அதிமுகவில் இருந்தபோது ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் உடனான சிடிஆர் நிர்மல் குமாருக்கு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே ராஜன் செல்லப்பாவை எதிர்த்து திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல் குமார் களமிறங்கி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே இருக்கும் நிலையில், தவெக சார்பாக பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் திருப்பரங்குன்றம் தொகுதியில் சீனியரான சிடிஆர் நிர்மல் குமார் பிரச்சாரம் பெரியளவில் எடுபடவில்லை என்று தெரிகிறது. அதற்கு திருப்பரங்குன்றம் தவெக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

திருப்பரங்குன்றத்தில் போட்டியிட அக்கட்சியின் மருது பாண்டியன் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்தார். அண்மையில் தனியாக அலுவலகம் தொடங்கி பல்வேறு பணிகளையும் செய்து வந்தார். ஆனால் திடீரென திருப்பரங்குன்றம் தொகுதியில் சிடிஆர் நிர்மல் குமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். சிடிஆர் நிர்மல் குமார் முதலில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாகவே இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் சிடிஆர் நிர்மல் குமார் களமிறங்கி இருக்கிறார். இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதிமுகவில் ஐடி விங் இணைச் செயலாளராக சிடிஆர் நிர்மல் குமார் செயல்பட்டு வந்தார். அப்போது ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் உடன் சிடிஆர் நிர்மல் குமாருக்கு ஒத்துப் போகவில்லை.
அதிமுகவில் சிடிஆர் நிர்மல் குமார் வளர்வதை ராஜ் சத்யன் தடுத்து நின்றதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிடிஆர் நிர்மல் குமார் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், மதுரை புறநகரில் உள்ள தொகுதிகளை குறி வைத்து பணியாற்ற தொடங்கி இருக்கிறார். இதனை அறிந்தே ராஜ் சத்யன் சிடிஆர் நிர்மல் குமாருடன் மோதி இருக்கிறார்.
இதன்பின் தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமார் தற்போது நேரடியாக ராஜ் சத்யனின் தந்தையான ராஜன் செல்லப்பாவுக்கு எதிராகவே களம் கண்டுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவுக்கு பெரியளவில் செல்வாக்கு இருந்தாலும், செளராஷ்டிரா மக்களின் ஆதரவு தவெக பக்கம் நகர்கிறது. அதேபோல் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு உருவாகி இருக்கிறது.
திமுகவுக்கு ஓரளவு வெற்றி வாய்ப்பு இருந்தாலும், ராஜன் செல்லப்பாவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் சிடிஆர் நிர்மல் குமார் திருப்பரங்குன்றத்தில் பணியாற்ற தொடங்கி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதனால் சிடிஆர் நிர்மல் குமாரின் கணக்கு சரியாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications