தீபம் விஷயத்தில் “பிரச்சனையை பார்த்துக்கொள்ளலாம்” என போலீஸ் சொன்னதா?-நீதிபதி G.R.சுவாமிநாதன் கேள்வி
மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், தீபம் ஏற்ற உத்தரவிட்டால் அதை மதிக்காமல் "வரும் பிரச்சனையை பார்த்துக்கொள்ளலாம்" என போலீஸ் சொன்னதா? என நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட அனைத்து அதிகாரிகளும் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். இந்த அவமதிப்பு வழக்கைக் கைவிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அரசு தரப்பு விளக்கம்
அதிகாரிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி. கிரி, "மலைப் பகுதியில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பக்தர்களைத் தடுப்பது அதிகாரிகளின் நோக்கமல்ல. சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைத் தவிர்க்கவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று வாதிட்டார்.
144 ஏன் அவசியம்?
நீதிமன்றம், கோயில் நிர்வாக அதிகாரி மூலம் தீபம் ஏற்றவே உத்தரவிட்டது. ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டதால் நிலைமை கையை மீறிச் சென்றது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே தடை உத்தரவு அவசியமானது என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கப்பட்டது.
விளைவுகளை சந்திக்க தயாரா?
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட்டார். ஜனவரி மாத 'கேரவன்' இதழில் வந்த ஒரு கட்டுரையை வாசித்தேன். அதில் ஓர் அதிகாரி, 'நீதிமன்ற உத்தரவை மீறுவதால் வரும் விளைவுகளைச் சந்திக்க நான் தயார்' என்று கூறியதாக எழுதப்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது, என்று கூறியிருந்தார்.
பத்திரிகை செய்தி
இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர்கள், "எந்த அதிகாரியும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேச மாட்டார்கள். விற்பனைக்காக சில பத்திரிகையாளர்கள் விவாதங்களை ஏற்படுத்தும் வகையில் எழுதுகிறார்கள்" என்று தெரிவித்தனர்.
கடிந்து கொண்ட நீதிபதி
விளக்கங்களை ஏற்ற நீதிபதி, "இந்த விவகாரத்தில் தர்கா தரப்பு மேல்முறையீடு செய்தால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது, ஆனால் அரசு தரப்பு மேல்முறையீடு செய்ய நினைப்பது அநியாயமானது" என்று கடுமையாகக் குறிப்பிட்டார். அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவர்கள் மீதான அவமதிப்பு வழக்கைத் தொடரப்போவதில்லை என்று குறிப்பால் உணர்த்தினார். இருப்பினும், மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த தடை உத்தரவில் தவறு இருப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications