இந்தா கிளம்பிட்டாங்கல்ல.. மாட்டுத்தாவணியில் டைடல் பார்க் அமைக்க கூடாது- ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்பது விளம்பர அறிவிப்பு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் மூலம் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்று இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே டைடல் பார்க் அமைப்பதற்கு முன் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மதுரைக்கு டைடல் பார்க் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தது விளம்பர அறிவிப்பு. மாட்டுத்தாவணி பகுதியில் கள ஆய்வு நடத்தாமல் டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.

ஆர்பி உதயகுமார் பேட்டி
மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து வசதிகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, மின்சார வசதிகள் உள்ளிட்ட எந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தாமல் டைடல் பார்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த வசதிகளை மேம்படுத்தாமல், முதலீட்டாளர்கள் எப்படி வருவார்கள்.

உட்கட்டமைப்பு வசதிகள்
மதுரையில் ஏற்கனவே எல்காட் மூலம் உள்ள 2 தகவல் தொழில்நுட்ப பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல. ஏற்கனவே மின்சார ரயில் சேவை திட்டம் அறிவிக்கப்பட்டு, இதுவரை கள ஆய்வு கூட செய்யப்படாமல் உள்ளது.

விளம்பர அறிவிப்பு
இதனால் அடிப்படை கட்டமைப்பு இல்லாத இடத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்காமல் டைடல் பார்க் அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணின் பார்வையை அழித்து விட்டு ராஜபார்வை பார்க்க சொல்வது போல் டைடல் பார்க் அறிவிப்பு உள்ளது. ஒருவேளை டைடல் பார்க் அமைக்கப்பட்டு, நிறுவனங்கள் வந்தால் நிச்சயம் மகிழ்ச்சி தான். ஏனென்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் இது விளையாட்டு பூங்கா அல்ல, தொழில் பூங்கா.

ஆ.ராசா பற்றி கருத்து
திமுகவின் முப்பெரும் விழா ஸ்டாலினின் புகழ் பாடும் விழாவாக அமைந்தது. இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசி இருப்பது கண்டனத்திற்குரியது. அவர் எப்போதும் போல் வரையறையை தாண்டி, எல்லையை தாண்டி பேசியுள்ளார். அவர் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications