34 தொகுதிகள்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு.. பியூஷ் கோயலை சந்திக்கும் எஸ்பி வேலுமணி!
மதுரை: அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று இரவு நடக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மதுரைக்கு வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீட்டை அறிவிப்பதற்கு முன்பாகவே, அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி பின்னடைவை சந்தித்து வருகிறது. தேமுதிக, தமிழகம் தேசம் கட்சி, ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக கூட்டணியில் இருந்தவர்கள் பலரும் திமுக பக்கம் சாய்ந்திருக்கின்றனர். இதனால் ராமதாஸ் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோருடன் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம் அதிமுக மற்றும் பாஜகவுக்கு நேரிட்டுள்ளது.

இதனிடையே கடந்த சில நாட்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே பாமக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட்ட சூழலில், சிறிய கட்சிகளுடன் அடுத்தடுத்து பேசி வருகிறார். தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டார்.
இந்த நிலையில் நாளை பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் நடக்க உள்ள என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அதுமட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் கோயிலிலும் வழிபாடு நடத்த இருக்கிறார். இதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்கூட்டியே இன்று மதுரைக்கு வரவிருக்கிறார். இந்த சூழலில், இன்று இரவு அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தவிருக்கிறார். இன்று திமுக - காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. விரைவில் இது உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு முன்பாகவே அதிமுக - பாஜக கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரங்களை வெளியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் அமமுகவுக்கு பாஜகவே தொகுதி பங்கீடு செய்யும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் பாஜகவுக்கு 45 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதில் 34 முதல் 36 தொகுதிகளில் நேரடியாக பாஜகவும், 9 தொகுதிகளில் அமமுகவும் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை, கோவை, சேலம், தர்மபுரி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications