மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- தமிழக அரசே நடத்த அதிரடி முடிவு!
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்துவதற்கு அதிரடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பீட்டா அமைப்பு தடை பெற்றது.

ஜல்லிக்கட்டு புரட்சி
இந்த தடையை உடைக்க தமிழர்கள் அனைவரும் ஓரணியில் ஒரு வார காலம் ஒன்று திரண்டு நடத்திய தை புரட்சி அல்லது சென்னை மெரினா புரட்சி உலக நாடுகளை அதிர வைத்தது. தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கோரும் அமைதிவழி போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் வந்து பார்த்து ரசித்தார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
இந்த ஆண்டு மதுரை அவனியாபுரத்தில் வரும் 14-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான குழு அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழு அமைப்பதில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை.

தமிழக அரசு நடத்தும்
இதனைத் தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக அரசே மாவட்ட நிர்வாகம் மூலம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இப்போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள்
மேலும் கொரோனா பரவல் காரணமாக இப்போட்டியை காண்பதற்கு உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். உள்ளூர் பிரமுகர்களின் வீடுகளுக்கு உறவினர்கள் யாரும் வருகை தரக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை கட்டாயம் போட்டிருக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications