இந்த திட்டம் நடந்தா செமையா இருக்கும்..தமிழ்நாடு-கேரள மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் ஏ.வ.வேலு
மதுரை: தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் உணவு வழங்கல்த்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

சாலை ஓரங்களில் மரங்கள்
பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றது. நில எடுப்பு பணிகள் காரணமாக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது, நில எடுப்பு பணியை விரைவுப்படுத்த 5 மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமனம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலை ஓரங்களில் மரங்கள் நடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,

பழனி - கொடைக்கானல் சாலை
பழனி - கொடைக்கானல் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொடைக்கானல் - மூணாறு இடையே சாலை அமைக்க கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கீழடியில் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. நகராட்சி, பேருராட்சி பகுதிகளில் புறவழிச்சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, 10 ஆண்டுகளாக மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகள் பாலம் கட்டுவதில் புறக்கணிப்பட்டுள்ளது,

கலைஞர் நினைவு நூலகம்
மதுரைக்கு கூடுதலாக 3 புதிய பாலங்கள் கட்டப்பட உள்ளன, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, நூலகம் இடம் தேர்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். நில எடுப்பு காலதாமதம் ஆனதால் கிழக்கு கடற்கரை சாலைகள் அமைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

டெண்டர் ரத்து
கிழக்கு கடற்கரை சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தி.மு.க சொன்னதையும் செய்துள்ளது, சொல்லாததையும் செய்துள்ளது, ஒற்றை முறை டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 17 துறைமுகங்களில் பயணிகள் போக்குவரத்தை கொண்டு வர இயலாது, கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் பயணிகள் போக்குவரத்து சாத்தியமில்லை" என கூறினார்.












Click it and Unblock the Notifications