"சுவரே இல்லை.." மதுரையில் குடிசை வீட்டுக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம்! ஷாக் கொடுத்த மின்வாரியம்
மதுரை: ஒரு பக்கத்தில் சுவர் கூட இல்லாத கூரை வீட்டிற்கு மின்வாரிய அதிகாரிகள் 28 ஆயிரம் அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார துறை சார்பில் பல்வேறு தரப்பினருக்கும் மானிய விலையிலும் இலவசமாகவும் மின்சாரம் வழங்கப்படுகிறது. வீடுகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.
அதேபோல விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே குடிசை வீடுகளில் வசிப்போருக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
மின்வாரிய ஊழியர்களுக்கு 'குட் நியூஸ்' சொன்ன தமிழக அரசு.. 3% உயர்வு.. 2 மாத நிலுவைத்தொகை உடனே!
கூரை வீடு
இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் கூரை வீட்டில் இலவச மின் இணைப்பைப் பெற்ற ஒருவருக்கு திடீரென மின்வாரிய அதிகாரிகள் 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்துள்ள கொங்கபட்டியை சேர்ந்தவர் நெருஞ்சியம்மாள். 45 வயதான இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினர் அதே பகுதியில் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர்.
மின்சாதனங்கள்
அவரது வீட்டிற்கு ஒரு பக்கம் சுவர் கூட இல்லை. சுவர் இல்லாத பக்கம் துனியை வைத்தே மூடியுள்ளனர். கூரை வீட்டில் வசிப்பதால் இவர்களுக்கு இலவச மின்சார இனைப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே சமீபத்தில் கொங்கபட்டி பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெருஞ்சியம்மாள் வீட்டையும் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவரது வீட்டில் டிவி, ஃபேன், பிரிட்ஜ், வாஷிங்மிஷின் போன்ற சாதனங்கள் இருந்ததைப் பார்த்துள்ளனர்.
அபராதம்
குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தில் பிரிட்ஜ், வாஷிங்மிஷினை பயன்படுத்தி வருவதாகக் கூறி மின்வாரிய அதிகாரிகள் நெருஞ்சியம்மாள் வீட்டிற்கு 28,000 ரூபாய் அபராதம் விதித்தனர் இதைப் பார்த்ததும் நெருஞ்சியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். ஒரு பக்க சுவர் கூட இல்லாத வீட்டிற்கு மின்வாரிய அதிகாரிகள் இவ்வளவு பெரிய தொகை அபராதம் விதித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் என்ன செய்வதென்று புரியாமல் தவித்துள்ளார்.
கோரிக்கை
இதையடுத்து நேரடியாகவே மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்ற நெருஞ்சியம்மாள் வீட்டில் இருந்த பொருட்கள் தனது மகளுக்குச் சீதனமாகக் கொடுத்த பொருட்கள் என்றும் அந்த பொருட்கள் எதையும் பயன்படுத்தியதே இல்லை என்பதால் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்ந்த மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
பரபரப்பு
பின்னர், அபராத தொகையை 28 ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் அபராதமாகக் குறைத்துள்ளனர். இருப்பினும், ஒரு பக்கச் சுவர் கூட இல்லாமல் தவித்து வருவதாகக் குறிப்பிட்ட நெருஞ்சியம்மாள், இந்த 3 ஆயிரத்தையும் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் இதனால் மின்வாரிய அதிகாரிகள் மீண்டும் மதிப்பீடு செய்து அபராத தொகையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். குடிசை வீட்டில் வசிக்கும் 45 வயது கூலித் தொழிலாளிக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.