இந்தியாவிலேயே வெப்பமான இடம்.. விஜய் கொஞ்சம் தொண்டர்களையும் யோசிக்கணும்.. தவெக செய்த மெகா சொதப்பல்!
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நடைபெற்றது. சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கூடிய இந்த மாநாடு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பல்வேறு சொதப்பல்களுடன் நடந்து முடிந்திருக்கிறது. இதனை ஒன் இந்தியா நேரடியாகக் களத்தில் இருந்து பதிவு செய்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் அருகே பாரபத்தியில் நடைபெற்றது. அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் புகைப்படங்கள் மாநாட்டின் மேடை உச்சியில் வைக்கப்பட்டு, விஜயின் "நா வரேன்" என்ற வசனத்துடன் தொண்டர்கள் வரவேற்கப்பட்டனர். 2 நாட்களுக்கு முன்பாக தவெக மாநாட்டு நாளன்று மழை பெய்துவிடக் கூடாது என்று சிலர் யாகம் செய்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால் தவெக மாநாடு நடந்த இடத்தில் இன்று வெயில் கொளுத்தியது என்று சொல்லலாம். ஒரு கட்டத்தில் அதிகாலையிலேயே தவெக மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள், மீண்டும் தங்களின் கார்கள், வேன்கள், பேருந்துகளுக்கு செல்ல தொடங்கினர். ஒரு சிலர் தங்களது இருக்கை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வெயிலேயே காத்திருந்தனர்.
11 மணியளவிலேயே வெயில் உச்சத்திற்கு வந்த நிலையில், 2 மணிக்கெல்லாம் தவெக தொண்டர்கள் பலரும் மயக்கம் போடத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் எங்கு திரும்பினாலும் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மயக்கம் போடுவது வழக்கமான ஒன்றாக மாறியது. அதேபோல் ஆம்புலன்ஸ் சத்தமும் மாநாட்டுத் திடல் அருகிலே கேட்டுக் கொண்டே இருந்தது.
கடந்த 2 மாதங்களாக மதுரை விமான நிலையம் பகுதி தான் இந்தியாவிலேயே அதிக ஹாட்டான இடம் என்று தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு வந்தது. மாநாட்டுத் திடலோ மதுரை விமான நிலையத்தில் இருந்து வெறும் 6 கிமீ சுற்றளவில் இருக்கிறது. இதனை முன்பாகவே சிந்தித்து மாநாடு ஏற்பாடுகளின் போது மேற்கூரை அமைத்திருக்கலாம். மேற்கூரை அமைத்திருந்தாலே, பலரும் நிம்மதியாக மாநாட்டில் அமர்ந்திருப்பார்கள்.
கேரவனில் இருந்து நேராக மாநாட்டுத் திடலுக்கு வரும் விஜயிடம், நிர்வாகிகள் யாராவது இதனை சொல்லிப் புரிய வைக்கலாம். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் மாநாடு பெரும்பாலும் மேற்கூரை அமைக்காமல் நடக்காது. அப்படி மேற்கூரை அமைக்காமல் நடத்தப்பட்டால், அந்த மாநாடு இரவு நேரத்தில் நடக்கும். இதனை தவெக மனதில் வைப்பது எதிர்காலத்தில் அக்கட்சியின் தொண்டர்களுக்கு மிகவும் நன்மையை அளிக்கும்.
ஏனென்றால் வெயிலால் பாதிக்கப்பட்ட பலரும் மாநாட்டில் இருந்து பாதியிலேயே கலைந்து சென்றார்கள். அதேபோல் தவெக மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகியது. அது என்னவென்றால், உணவு பற்றாக்குறை தான். தவெக தொண்டர்கள் பலரும் உணவுக்காகப் பல கிமீ தூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மாநாட்டுத் திடலுக்கு அருகில் வேறு ஹோட்டல்களும் இல்லாததால், அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட தரம் குறைந்த உணவுகளை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோல் மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்களைக் கையாள கேரளாவில் இருந்து பவுன்சர்களை அழைத்து வந்தது மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கியது.
ஏனென்றால் வெயிலின் பிரச்சனைக்கு நிகராக பவுன்சர்களின் பிரச்சனையும் இருந்தது. தவெக தொண்டர்கள் பலரும் விஜயை அருகில் பார்க்க முயன்று பல்வேறு வழிகளில் முயற்சிக்க, அவர்களுடன் பவுன்சர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தின் பவுன்சர்கள் உடனான மோதல் காரணமாக, தவெக தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.
விஜயின் பேச்சு, பாடல் உள்ளிட்டவை தவெக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், கிட்டத்தட்ட 9 மணி நேரம் காத்திருந்து வெயில் தாக்கம், பவுன்சர்களுடன் மோதல், உணவு கிடைக்காமல் மாட்டிக் கொண்டது என்று தவெக மாநாட்டில் ஏராளமான சொதப்பல்கள் நடந்துள்ளன. மாநாட்டுக்குப் பிரம்மாண்டமாக இடத்தை தேர்வு செய்த தவெக, தொண்டர்களுக்கு போதுமான வசதிகளை செய்து கொடுக்கவும் முன் வர வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications