நிரம்பி வழியும் வைகை அணை..7 பிரதான மதகுகளில் உபரிநீர் திறப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை
மதுரை: வைகை அணை நிரம்பியுள்ளதால் 7 பிரதான மதகுகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படுகிறது. வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அணைக்கு தற்போது 2,735 கன அடி நீர் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், 2,735 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையின் மேல் மதகு வழியாக நீர் திறக்கப்பட்டது.
Recommended Video
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, மூல வைகை, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீரும் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, ஆற்றை கடக்கவோ, இறங்கவோ, குளிக்கவோ, துவைக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில், பொதுவாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடி வந்தவுடன், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே உபரிநீராக திறந்து விடப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை அனைத்து பகுதிகளிலும், பரவலாக மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டத்தை 70 அடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் நீர்வரத்து அதிக அளவில் இருப்பதால் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது.
அணை நிரம்பியதை அடுத்து அணையின் மேல்புறத்தில் உள்ள அபாய சங்கு 3 முறை ஒலிக்கப்பட்டது. 7 பிரதான மதகுகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படுகிறது. வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அணைக்கு தற்போது 2,735 கன அடி நீர் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், 2,735 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையின் மேல் மதகு வழியாக நீர் திறக்கப்பட்டது.
வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ முயற்சி செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகளில் 31வது முறையாக வைகை அணை நிரம்பியுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.