வைகாசி விசாகம்: மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் - எங்கெங்கு நிற்கும் தெரியுமா?
வைகாசி விசாகத்தினை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை: வைகாசி விசாகம் திருநாளை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி, பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து பழநிக்கு சிறப்பு முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்படும் என்று மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுரையில் இருந்து பழனி, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் மதுரை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தி இருந்த நிலையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வைகாசி விசாகத்திருவிழா வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூரில் பால்குடம் எடுத்தும் காவடிகள் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. தெற்கு இரயில்வே பொதுமேலாளருக்கு எழுதிய கடிதத்தில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர், பழனி ஆகிய முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆண்டுதோறும் நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் பயணம் செய்வார்கள். அன்றாட பயணி வண்டிகளில் கோடைகாலம் ஆதலால் இடம் போதாது. எனவே சிறப்பு ரயில்களை ஒரு வாரம் இயக்கிட வேண்டும் என கடிதம் எழுதி இருந்தார்.
8 மாதங்களில் எழுந்து நிற்கும் கலைஞர் நூலகம்.. 40 மாதங்களாக ஒற்றை செங்கல்லில் எய்ம்ஸ்: சு.வெங்கடேசன்
மதுரையில் இருந்து பழனிக்கு ரயில்
இந்த நிலையில் வைகாசி விசாகம் திருநாளை முன்னிட்டு வரும் 12ஆம் தேதி, பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்படும் என்று மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில் இயக்கம்
பழனியில் ஜூன் 12ஆம் தேதி வைகாசி விசாக திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பயணிகள் வசதிக்காக மதுரை - பழனி ரயில் நிலையங்களுக்கு இடையே சிறப்பு ரயில் ஒன்று இயக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மதுரை - பழனி முன்பதி வில்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு பழனி சென்று சேரும்.
பழனியில் இருந்து மதுரைக்கு ரயில்
மறுமார்க்கத்தில் பழனி - மதுரை முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் பழனியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஒரு நாள் சிறப்பு ரயில் இயக்கம்
இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்கள் ஜூன் 12ஆம் தேதி ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.