"20க்கு 60..!" மதுரை ஏர்போர்ட் வாசலில் வேற லெவல் "மோசடி!" வீடியோவில் வசமாக சிக்கிய ஹிந்தி வாலா!
மதுரை: மதுரையில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் பார்கிங்கிற்கு அதிக கட்டணம் கேட்டு அடாவடி செய்யும் சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மதுரையை பொறுத்தவரைப் பெருங்குடி பகுதியில் விமான நிலையம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக மதுரை விமான நிலையம் இருக்கிறது.

இங்கிருந்து நமது நாட்டில் பல முக்கிய நகரங்களுக்கும் சில வெளிநாடுகளுக்கும் நேரடி விமானச் சேவை இருக்கிறது. ஆனால், அங்கு வாகன நிறுத்தமிடத்தில் சில காலமாகவே தொடர்ந்து பிச்சினை நிலவி வருகிறது.
மதுரை ஏர்போர்ட்: அனைத்து ஏர்போர்ட்களை போலவே மதுரை ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பும் பயணிகளை டிராப் செய்யவும் அங்கு வரும் பயணிகளை அழைத்துச் செல்லவும் குடும்பத்தினரும் உறவினர்களும் அங்கு வருகிறார்கள். அப்படி அங்கு வாகனங்களில் வருவோரின் நேரம் பதிவு செய்யப்பட்டு அவர்கள் வெளியேறும் போது கட்டணம் வசூலிக்கப்படும். பொதுவாக அனைத்து ஏர்போர்ட்களிலும் இதே நடைமுறை தான் இருக்கும்.
ஆனால், மதுரை ஏர்போர்ட்டில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் இருந்து கொண்டே இருக்கிறது. அதாவது மதுரை ஏர்போர்ட்டை பொறுத்தவரை அங்கே அரை மணி நேரத்திற்கு 20 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 30 நிமிடங்களுக்குள் வெளியே வரும் வாகனங்களிடமும் 60 ரூபாயை அங்குள்ள ஊழியர்கள் வசூலிப்பதாகப் புகார்கள் இருந்து கொண்டே இருக்கிறது. அவசரமாகக் கிளம்பும் நபர்களிடம் அங்குள்ள ஊழியர்கள் அதிக கட்டணம் தருமாறு வலியுறுத்துகிறார்கள்.
இந்தி பேசும் ஊழியர்கள்: அங்குள்ள இந்தி பேசும் ஊழியர்களுக்குத் தமிழும் தெரிவதில்லை. இதனால் கிளம்பும் அவசரத்தில் அவர்களிடம் பேசியும் பிரயோஜனம் இல்லை என்று பலரும் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் இன்று நடந்துள்ளது. ஆனால், அதில் காரில் வந்த அந்த நபர் முழு சம்பவத்தையும் வீடியோவாக எடுத்துள்ளார்.
அதிக கட்டணம்: அந்த நபர் 9.21க்கு மதுரை ஏர்போர்ட் உள்ளே வந்துள்ளார். வெளியேறும் போது 28 நிமிடங்கள் ஆகியுள்ளது. அப்போது அங்கே இருக்கும் வடமாநில இளைஞர் முதலில் 60 ரூபாயைக் கேட்கிறார். காரில் வந்த நபர் "எப்படி 60 ரூபாய்" என்று கேட்கவே.. அதற்கு ஏதேதோ சொல்லிச் சமாளிக்க முயல்கிறார் அந்த வடமாநில இளைஞர்.. பிறகு வீடியோ எடுப்பதைப் பார்த்தவுடன் பதறிய அந்த வடமாநில இளைஞர், ஏதோ காரில் வந்த நபர் பிரச்சினை செய்வதைப் போலக் காட்ட முயல்கிறார்.
மேலும், காரில் வந்த அந்த நபரை வீடியோ எடுக்கும் வடமாநில இளைஞர், தான் ரூ.20ஐ மட்டுமே கேட்டதாகவும் குறிப்பிடுகிறார். இருப்பினும், அந்த வடமாநில இளைஞர் முதலில் ரூ.60ஐ கேட்பது வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதற்குப் பலரும் இது ஏதோ ஒருவருக்கு மட்டும் நடந்த சம்பவம் இல்லை என்றும் தாங்களும் இதுபோல அதிகப் பணம் கொடுக்க நேர்ந்துள்ளதாகக் கூறினர்.

மாணிக்கம் தாகூர்: இந்த வீடியோ டிரெண்டான நிலையில், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "விமான நிலைய இயக்குநரிடம் பேசினேன்.. தேவையில்லாத பிரச்சினை ஏற்படுத்திய அந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக விமான நிலைய இயக்குநர் உறுதியளித்தார்.
இதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த நபரை நான் பாராட்டுகிறேன். இந்த பகல் கொள்ளை குறித்து சிவில் ஏவியேஷன் துறை அமைச்சர் சிந்தியா விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.. மதுரை விமான நிலையத்திற்கு நல்ல சேவை தேவை" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications