இனிமே நம்ம தான்.. டிக் அடித்த விஜய்.!மதுரையை ரவுண்ட் கட்டும் அரசியல் கட்சிகள்! இவ்வளவு வரலாறா?
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மதுரையில் மாநாடு என்பது பல்வேறு நோக்கங்களை உள்ளடங்கியதாக பார்க்கப்படுகிறது. மதுரையில் மாநாடு ஏன்? அரசியல் கட்சிகள் மதுரையை ரவுண்டு கட்ட காரணம் என்ன என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.
எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன் வரை மதுரையில்தான் தங்கள் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர். எனவே மதுரையில் மாநாடு நடத்தினால் வெற்றி நிச்சயம் என்று அரசியல் தலைவர்கள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது. இதன் அடிப்படையில்தான் விஜய்யும் மதுரையில் மாநாட்டை திட்டமிட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அரசியலில் திருப்புமுனை
மதுரை மண் தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. மகாத்மா காந்தி தனது முழு ஆடையை துறந்து அரை ஆடையை உடுத்தியதும் இங்குதான். மதுரையில் சாமானிய மக்களை பார்த்த அவர், உடுத்துவதற்கு முழு உடையில்லாமல் மக்கள் இருக்கையில், நாம் மட்டும் எப்படி முழு ஆடையை உடுத்துவது என்று உணர்ந்து, அரை ஆடையை உடுத்தினார். 1921ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி மரணம் வரை காந்தி அரையாடையில்தான் இருந்தார். இதற்கு மதுரைதான் காரணம்.
இடதுசாரிகளின் கோட்டை
கடந்த 1953ம் ஆண்டு தொடங்கி 1972 வரை கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடுகள் மதுரையில் நடந்திருக்கின்றன. எனவே மதுரையில் இடதுசாரி அமைப்புகள் வலுவாக காலூன்றி இருக்கின்றன. இன்றைக்கும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக சிபிஎம்-ன் சு.வெங்கடேசன் தொடர்கிறார். சமீபத்தில் இக்கட்சியின் அகில இந்திய மாநாடும் மதுரையில் நடந்தது.
அதிமுக தொடக்கம்
இடதுசாரிகளை தொடர்ந்து, அதிமுகவும் மதுரையில் வலுவானதாக இருக்கிறது. கடந்த 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி எம்ஜிஆர் மதுரையில்தான் அதிமுக எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். இக்கட்சி தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. இதற்கான தொடக்கம் மதுரைதான். மதுரை மக்களின் ஆதரவு இருந்தால் வெற்றி நிச்சயம் எனும் கருத்தியல், அதிமுக தொடக்கத்திற்கு பின்னர் அரசியல் கட்சிகள் மத்தியில் பரவலாக எழுந்தது.
கேப்டனின் எழுச்சி
திரைத்துறை ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் கடந்த 2005ல் மதுரையில் வைத்துதான் 'தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்(தேமுதிக)' எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். கடந்த 2000ம் ஆண்டே தனது ரசிகர் மன்றத்துக்கு என தனி கொடியை விஜயகாந்த் அறிமுகப்படுத்தி இருந்தார். இதனையடுத்து 2001ல் உள்ளாட்சி தேர்தலில் தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களை போட்டியிட வைத்தார்.
இதன் மூலம் கிடைத்த வெற்றி விஜயகாந்த்தை தீவிர அரசியலை நோக்கி தள்ளியது. ஒரு கட்டத்தில் தேமுதிக தமிழக எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தவரை பெற்றது. இதற்கு எல்லாம் தொடக்கப்புள்ளி மதுரைதான்.
மநீம கமல்ஹாசன்
நடிகர்கள் அரசியல் களத்திற்கு வருவது மரபாக மாறிய நிலையில், அதை கமல்ஹாசனும் பின்தொடர்ந்தார். கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி மக்கள் நீதி மய்யம் எனும் அரசியல் கட்சியை கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை பகுதியில் தொடங்கினார். திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லி இந்த கட்சி தொடங்கப்பட்டாலும், தற்போது திமுக கூட்டணியில்தான் கமல்ஹாசன் தொடர்கிறார். தற்போது மாநிலங்களவை எம்பியாக இருக்கிறார்.
ஆக இவ்வளவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மதுரையில் மாநாடு நடத்தினால் வெற்றி நிச்சயம் என்பதை விஜய் உணர்ந்திருக்கிறார். எனவேதான் இங்கு மாநாட்டை அவர் நடத்துகிறார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முருகன் மாநாடும் திருப்பரங்குன்றமும்
திருப்பரங்குன்றத்தில் உள்ள மசூதியில் உயிர் பலி கூடாது என் இந்துத்துவா அமைப்புகள் சர்ச்சையை கிளப்ப, விஷயம் நீதிமன்றம் வரை சென்றிருந்தது. இந்நிலையில், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்கிற பெயரில் இந்து முன்னணி மிகப்பெரிய மாநாட்டை நடத்தியிருந்தது. அதில், ஆந்திர துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இதெல்லாம் மதுரை மண்ணில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகள், நடத்தப்பட்ட மாநாட்டின் விவரங்கள். இது தவிர சில அரசியல் சலசலப்புக்கும் மதுரை மண் பெயர் பெற்றிருக்கிறது.
இங்கிருந்துதான் 'திருமங்கலம் ஃபார்முலா' என்று உருவானது. அதாவது வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுக்கும் முறை மதுரை மண்ணிலிருந்துதான் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத்தான் 'திருமங்கலம் ஃபார்முலா' என்று சொல்கிறார்கள். 2009ம் ஆண்டு திமுக ஆளும் கட்சியாக இருந்தது. அந்த சமயத்தில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. ஆளும் கட்சி இடைத்தேர்தலில் தோற்றால் அது கவுரவ பிரச்சனை. எனவே மு.க.அழகிரி தலைமையில் திமுக தீவிரமாக பணியாற்றியது.
இதற்காக பணம் நேரடியாக வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணை தூவி, வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக அதிமுக குற்றம்சாட்டியிருந்தது. பின்னாட்களில் மற்ற இடங்களில் இப்படி பணம் விநியோகிக்கப்படும்போது அது 'திருமங்கலம் ஃபார்முலா' என்றே அழைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications