கோபத்துடன் நீதிபதி சொன்னது என்ன? மதுரை ஐகோர்டில் 7 மணி நேரம் காத்திருந்த ராமநாதபுரம் கலெக்டர்
மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த கிருஷ்ணன் என்பவர் பதவி உயர்வு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் நேற்று ஆஜரானார். அப்போது அரசு தரப்பில் வழக்கை விரைந்து விசாரணை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால் வழக்கு வரிசைப்படி தான் வரும் என்று கூறி நீதிபதி கூறினார். இதனால் கலெக்டர் விசாரணைக்காக 7 மணி நேரம் காத்திருந்தார்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் உதவியாளர் பணியின் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் 2003ம் ஆண்டு முதல் ஜூனியருக்கு முன் அவரின் பெயரை சேர்க்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் கடந்த 03.07.2024 அன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவரின் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் பெயர் சேர்க்க வருவாய் துறை செயலாளர் பரிந்துரை அனுப்ப வேண்டும் என்றும் அதன் பிறகு வருவாய் துறை செயலாளர் அனுமதி அரசாணை பெற்றவுடன் ஆறு வாரத்திற்குள் இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பட்டு தேவானந்த் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருவாய் துறை செயலாளர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ததன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவை ராமநாதபுரம் ஆட்சியர் அமல்படுத்தினார்.
இது தொடர்பாக நேற்று (மார்ச் 28) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜரானார். அரசு தரப்பில், வழக்கில் மாவட்ட ஆட்சியர் ஆஜராகி உள்ளதால் வழக்கை விரைந்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதியிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதி "சட்டத்திற்கு முன் அனைவரும் சமமே; வழக்கு வரிசைப்படி வரும். அதுவரை மாவட்ட ஆட்சியர் காத்திருக்கட்டும்" என தெரிவித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நீதிமன்றத்தில் காத்திருந்த பிறகு அவரது வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், ''வருவாய் துறை செயலாளருக்கு பதிலாக நீங்கள் எப்படி பதில் மனு தாக்கல் செய்யலாம் ? நீதிமன்ற விதிகளை பற்றி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள்? நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால் தான் நீங்கள் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டுமா? காலதாமதமாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதற்கான உரிய காரணத்தை கூறுங்கள் என்று கேட்டு இறுதியில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications