மளமளவென எரிந்த பெட்டிகள்.. அடுத்த டிராக்கில் இன்னொரு ரயில் சென்றது எப்படி? நேரில் பார்த்தவர் பேட்டி
மதுரை: மதுரையில் லக்னோ- ராமேஸ்வரம் சென்ற பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்த உள்ளூர்வாசி கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 65 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்க்க சென்றனர். அவர்களுடன் இரு சமையல் கலைஞர்களை அழைத்துக் கொண்டு 3 பெட்டிகளில் முழுக்க பயணித்தனர்.

இந்த பெட்டி லக்னோ- ராமேஸ்வரம் செல்லும் ரயில்களில் கடைசியாக இணைக்கப்பட்டு ஆங்காங்கே செல்லும். அந்த வகையில் இவர் இன்று அதிகாலை 3.48 மணிக்கு புனலூர் வந்தனர். அங்கு ரயில் நிலையத்தில் இவர்களுடைய இணைப்பு ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸார், மாவட்ட நிர்வாகத்தினர், தீயணைப்பு துறையினர் என சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்துவிட்டனர். அவர்கள் தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர். இதில் 10 பேர் தீயில் கருகி உயிரிழந்துவிட்டனர். அவர்களுடைய உடல்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தகவல் பெறும் வகையில் இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணமாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அது போல் தமிழக முதல்வர் ஸ்டாலினும் நிவாரணத் தொகையாக தலா ரூ 3 லட்சம் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இறந்தவர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த விபத்துக்கு முக்கிய காரணமே சமையல் எரிவாயு சிலிண்டர் என்கிறார்கள். அதிகாலை புனலூருக்கு இந்த ரயில் பெட்டி 3.48 மணிக்கு வந்ததாகவும் இணைப்பு பெட்டிக்காக காத்திருந்த போது டீ குடிக்க சமையல் எரிவாயு சிலிண்டரை பற்ற வைத்த போது அதிலிருந்து கேஸ் லீக்காகி தீப்பிடித்து எரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து நேரில் பார்த்த பிரகாஷ் என்பவர் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் , நான் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு பக்கத்தில்தான் வசித்து வருகிறேன். எனக்கு அதிகாலை 4.30 மணிக்கு பெண்களின் கூக்குரல் கேட்டது. அப்போது ரயிலில் இருந்து பலர் தப்புகிறார்கள். உடனே ஓடி போய் பார்த்தேன். அப்போது ரயில் பெட்டி ஒன்று கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. எங்களால் ரயில் பெட்டியின் கிட்டே கூட நெருங்க முடியாத அளவுக்கு தீ எரிகிறது.
உடனே எஸ்எஸ் காலனி காவல் நிலையத்திற்கு போய் நாங்கள் போலீஸாரை அழைத்து வந்தோம். இதனிடையே அவ்வழியாக வந்த சண்டிங் வண்டியின் டிரைவர் பக்கத்து ஸ்டேஷனில் போய் ரயில் பெட்டி எரிவதை தகவல் தெரிவித்துவிடுகிறார். மேலும் எஸ் எஸ் காலனி போலீஸார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அனைவரும் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்துவிட்டார்கள். இதில் வயதானவர்கள் அப்பர் பெர்த்தில் படுத்துக் கொண்டிருந்தனர். அவர்களால் எழுந்து தப்பி வர முடியவில்லை. இதனால் தீயில் கருகினர்.
இந்த விபத்துக்கு காரணம் இவர்கள் கொண்டு வந்த சிலிண்டர்தான். வந்தவர்களில் 90 சதவீதம் பேர் ஆங்காங்கே இறங்கிவிட்டனர். இதில் 10 சதவீதம் பேர் மட்டும் ரயிலில் தங்கிவிட்டனர். இவர்கள்தான் சமைக்கத் தொடங்கினர். பொதுவாக கீழே இறங்கிதான் சமைப்பார்கள். ஆனால் இவர்கள் வண்டியிலேயே சமைத்தனர். அதனால் தீவிபத்து ஏற்பட்டது. நாம் ரயில் பயணம் முடிந்தவுடன் இறங்கி விடுகிறோம். ஆனால் இவர்கள் அந்த ரயிலிலேயே தங்கிவிடுகிறார்கள். அவ்வாறு தங்கும் இவர்கள் உணவு பொருள் தயாரிக்கும் போது இது போன்ற தீவிபத்து ஏற்படுகிறது.
மத்திய அரசின் ஒரு வாகனம், இதில் பயணித்துவிட்டு இறங்க வேண்டும் என நினைப்பதில்லை. அந்த ரயிலை வீடாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என நேரில் பார்த்தவர் தெரிவித்தார். சண்டிங் வண்டி என்றால் விரைவு ரயில்கள் சேர வேண்டிய ரயில்வே ஸ்டேஷனை சென்றடைந்ததும், அந்த வண்டியின் காலிப்பெட்டிகளை பிட்லயனுக்கு செல்லும் ரயில் ஆகும். இதில் பயணிகள் யாரும் இருக்க மாட்டார்கள். அதாவது டிப்போவில் இருந்து பேருந்து நிலையத்திற்கு காலியாக பேருந்து செல்லும் அல்லவா, அது போல்தான் இந்த சண்டிங் வண்டி.












Click it and Unblock the Notifications