அரசியல்வாதிக்கு எளிமை தேவை.. பரந்தூர் செல்லும் விஜய்-க்கு ஏன் இவ்வளவு செக்யூரிட்டி.. அண்ணாமலை கேள்வி
மதுரை: பரந்தூரில் போராடும் மக்களை சென்று சந்திப்பதற்கு தவெக தலைவர் விஜய் இவ்வளவு ப்ரோட்டோக்கால், செக்யூரிட்டியுடன் செல்வது தமிழக அரசியலுக்கே புதிதாக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அரசியல்வாதிகள் எளிமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், விஜய் பதவிக்கு வந்தால் மக்கள் எப்படி அணுகுவார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் நாளை பரந்தூரில் மக்களை சந்திக்க உள்ளார். பரந்தூரில் திட்டமிடப்பட்டுள்ள புதிய விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்களையும், போராட்டக் குழுவையும் தனியார் திருமண மண்டபத்தில் சந்திக்கவுள்ளார். இதற்காக காவல்துறை அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது.

இதற்கான தயாரிப்பு பணிகளை தவெக நிர்வாகிகள் பரந்தூரில் மேற்கொண்டு வருகின்றனர். முதல்முறையாக மக்களை விஜய் சந்திப்பதால், பலரின் கவனமும் அந்த சம்பவம் மீது திரும்பியுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பரந்தூரில் மக்களை சந்திக்கவுள்ள விஜய் மீது விமர்சனங்களை வைத்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், இதுக்கே இப்படி இருந்தால், விஜய் அவர்கள் முதலமைச்சரான பின் மக்கள் எப்படி சென்று சந்திப்பார்கள். நான் தெரியாமத் தான் கேட்கிறேன்.. ஐயா காமராஜர் முதலமைச்சராக இருந்த போது சாதாரணமாக செருப்பு அணிந்து கொண்டு மோகனூர் அருகில் அணையை கட்டி முடித்தார்.
இன்று ஒரு அரசியல் கட்சி தொடங்கியிருப்பவர் செல்வதற்கு ப்ரோட்டோக்கால், செக்யூரிட்டி, ஆயிரம் போலீஸ்.. எந்த மக்களை சந்திக்க போகிறீர்கள்.. என்ன குறையை கேட்க போகிறீர்கள்.. மக்கள் சொல்கிற குறைகளை எப்படி அந்த கூட்டத்தில் நினைவு வைத்துக் கொள்ள போகிறீர்கள்.. அதன் தொடர்ச்சி என்ன.. ஒருவேளை எதிர்காலத்தில் எம்எல்ஏ, எம்பி ஆகிறீர்கள் என்றால், யார் வந்து உங்களை சந்திக்க முடியும்.
இதனையே நான் விசித்திரமாக பார்க்கிறேன். அரசியலில் இருப்பவர்கள் எளிமையாக நடந்து சென்று மக்களை பார்ப்பதை தான், இத்தனை காலமாக பார்க்கிறேன். முதல்முறையாக ப்ரோட்டோக்கால், செக்யூரிட்டி, கட்டுப்பாடுகள் என்ற அரசியலை புதுமையாக பார்க்கிறேன். நாளை எப்படி மக்கள் அணுகுவார்கள். எத்தனை பேர் வீட்டிற்கு சென்று பார்க்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து இந்தியா கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என்ற செல்வப்பெருந்தகை கருத்து குறித்து, திராவிடக் கட்சியுடன் கூட்டணியில் உள்ள தலைவர் விஜயை அழைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் எந்த கட்சியெல்லாம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறதோ, அவர்கள் அனைவரும் விஜயை துணைக்கு அழைக்கிறார்கள். எங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் என்று.. அண்ணன் செல்வப்பெருந்தகை விஜய் மீது வைத்துள்ள நம்பிக்கையை, ராகுல் காந்தி மீது வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications