“நாங்க பங்காளிகள்.. நீ யாரு?”.. வடிவேலுவை ஒருமையில் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு!
மதுரை: மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, நடிகர் வடிவேலுவை கடுமையாக விமர்சித்துள்ளார். "வீணாப் போன வடிவேலு அதிமுக ஒடஞ்சி சிதறி கிடக்குதுனு சொல்றாரு.. நாங்க பங்காளிகள் அடிச்சிக்குவோம் நாளைக்கு ஒண்ணு சேர்ந்துக்குவோம்.. நீ யார்?" என நடிகர் கஞ்சா கருப்பு பேசியுள்ளார்.
அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக பேச்சாளர் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினர். அப்போது கஞ்சா கருப்பு, திமுக ஆதரவாளரான நடிகர் வடிவேலுவை சரமாரியாகத் தாக்கிப் பேசினார்.

கஞ்சா கருப்பு பேசுகையில், "முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எல்லோருக்கும் இலவச ரேஷன் கார்டு கொடுத்தார். எம்.ஜி.ஆர் மின்விளக்கு திட்டத்தை கொண்டு வந்தார். ஜெயலலிதா 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுத்தார். ஆனால் திமுக ஆட்சியில், 100 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒரு வீட்டில் மின் இணைப்பு வாங்கவே மக்கள் சிரமப்படுகிறார்கள். இதை தட்டிக் கேட்டால் என்னை குற்றவாளி என்கிறார்கள்" என்று கூறினார்.
மேலும் அவர், "வீணாப் போன வடிவேலு, உடைஞ்சு சிதறிக் கிடக்கிறார்கள், ஒன்று சேர மாட்டார்கள் என்றார். நாங்கள் இன்று சண்டை போட்டாலும், நாளை ஒன்று சேர்ந்து விடுவோம். எங்களுக்குள் இருப்பது அங்காளி, பங்காளி சண்டை. நாங்கள் ஒன்று சேர்ந்து விட்டோம். அதை கேட்பதற்கு நீ யார்? எப்போது அதிமுகவைப் பற்றி பேசினாயோ, அப்போதே நாங்கள் வெற்றி பெற்று விட்டோம். வடிவேலு இருப்பது ஆமை நுழைந்த கட்சி, நாங்கள் இருப்பது அழகான கட்சி" என்று கடுமையாக விமர்சித்தார்.
எம்.ஜி.ஆர் மக்களுக்கு அனைத்தையும் செலவழித்தார். ஜெயலலிதா மானிய விலையில் ஸ்கூட்டர் கொடுத்தார். ஆனால் ஸ்டாலின் தனது குடும்பத்திற்கு சொத்து சேர்க்கிறார். ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயிக்கலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். பணத்தை வாங்கிக் கொண்டு, இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்.
ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். வீடு கட்ட அதிக வரி வாங்குகிறார்கள். எம்.ஜி.ஆர் பள்ளிக் குழந்தைகளுக்கு காலணி கொடுத்தார். பொங்கலுக்கு ஏழைகளுக்கு வேட்டி, சேலை கொடுத்தார். திமுகவினர் பொய் மட்டுமே பேசி வருகின்றனர். கூடிய சீக்கிரம் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி நிச்சயம் தமிழக முதலமைச்சர் ஆவார். எல்லோருக்கும் பெரிய பொறுப்புகள் கிடைக்கப் போகிறது" என கஞ்சா கருப்பு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications