ஆன்மிகம் -கல்வி -தொழில்! யார் இந்த கருமுத்து கண்ணன்! மதுரை மக்களின் மனங்களில் இடம்பிடித்தது எப்படி?
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார், தொழிலதிபர், கல்வித்தந்தை என பன்முகங்களை கொண்ட கருமுத்து கண்ணன் மறைவு மதுரை மாநகர மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, ஸ்டாலின், ப.சிதம்பரம் என அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களின் அபிமானத்தை பெற்றவர் கருமுத்து கண்ணன்.

ஒரு தொழிலதிபர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக நடந்துகொண்டவர் கருமுத்து கண்ணன். தியாகராசர் மில்ஸ் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து வரும் இவர், தொழிலாளர்களுடன் சீராக நல்லுறவை பேணக்கூடியவர்.
அதேபோல் தியாகராசர் கலை அறிவியல் கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி என கல்லூரிகளையும் நிர்வகித்து வந்த கருமுத்து கண்ணன், இதுவரை ஒரு மாணவரிடம் கூட ஒரு ரூபாய் டொனேஷன் வாங்கிய வரலாறு இல்லை.
டொனேஷன், கேபிடேஷன் ஃபீஸ் என பெற்றோரை அலைக்கழிக்கும் போலி கல்வித் தந்தைகளுக்கு மத்தியில் கல்வியை அறத்துடன் வழங்கிய பெருமைக்கு சொந்தக்காரர் கருமுத்து கண்ணன்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்காராக இன்று நேற்றல்ல 18 ஆண்டுகளாக இருந்து வரும் கருமுத்து கண்ணன், பக்தர்கள் போற்றத்தக்க தனது கோவில் நிர்வாக அறப்பணிகளை தொடர்ந்தார்.
அதிமுக, திமுக என தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மீனாட்சியம்மன் கோவில் தக்காராக கருமுத்து கண்ணனே தொடர்ந்தார். காரணம் அரசியல் பார்க்காமல் எல்லோரிடத்திலும் யதார்த்தமாக நடந்தக் கொள்ளக்கூடியவர்.
இவரது தந்தை தியாராசர் செட்டியார் நிறுவிய தியாகராசர் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்த பலர் இன்று உலகம் முழுவதும் கொடிக்கட்டிப் பறக்கின்றனர். சிலர் அரசியல் பிரமுகர்களாகவும் இருக்கின்றனர். மொழிப்போரின் போது கருமுத்து கண்ணனின் தந்தை தியாகராசர் செட்டியார் மாணவர்களுக்கு ஆதரவாக நின்றவர்.

முதலமைச்சரிடத்தில் தொலைபேசியில் பேசும் அளவுக்கு செல்வாக்கு இருப்பினும், அடக்கத்துடன் ஆரவாரமின்றி செயல்பட்டவர் கருமுத்து கண்ணன். ஆன்மிகம், கல்வி, தொழில், ஆகியவற்றை கடந்து சமூக நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் கருமுத்து கண்ணன்.
மதுரை மாநகர வளர்ச்சிக்கு எண்ணற்ற பங்களிப்பை செலுத்தியவர். தனது தந்தையை போல் தமிழ் பற்றாளராக திகழ்ந்தவர். முந்தைய திமுக ஆட்சியில் கருணாநிதியால் மாநில திட்டக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு - மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் உருவாக்குவதில் துணை நின்றவர்.
அதேபோல் இப்போது இந்து சமய அறநிலையத்துறைக்கு தேவையான ஆலோசனைகள் வழங்க உயர்நிலை ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
இவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் உருக்கமுடன் இரங்கல் விடுத்துள்ள நிலையில், அமைச்சர் பிடிஆரும், வைகோவும் கண்ணீர் விட்டு அழுதவாறு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அரசியல் தட்பவெப்ப நிலைகளை பற்றி கவலைக்கொள்ளாமல் வைகோவுடன் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புடன் பழகி வந்தவர் கருமுத்து கண்ணன்.












Click it and Unblock the Notifications