யூடியூப் வீடியோ பார்த்து வங்கியில் கொள்ளையடிக்க ரெடியான முன்னாள் வங்கி ஊழியர்! மடக்கி பிடித்த போலீஸ்
மதுரை: யூடியூப் வீடியோக்களை பார்த்து வங்கியில் கொள்ளை அடிக்க முயற்சித்த முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின் (30). இவர் எம்பிஏ படித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். பிறகு வேலையை விட்டுவிட்டு சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். ஆன்லைன் மூலம் ரம்மி விளையாட ஆரம்பித்து அதில் பணத்தை இழந்துள்ளார்.

இதையடுத்து, இழந்த பணத்தை மீட்டெடுக்க வேண்டும் என மீண்டும் கடன் வாங்கி விளையாடி சுமார் ரூ.5 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். இதையடுத்து, எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி என யோசித்த அவர், வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் போட்டுள்ளார்.
முன்னாள் வங்கி ஊழியரான லெனின், வங்கியில் திருடுவது எப்படி என்று யூடியூபில் வீடியோக்களை பார்த்து, வங்கி திருட்டுக்கு உதவும் உபகரணங்கள் என்னென்ன என பார்த்து அதனை ஆன்லைன் மூலம் வாங்கி தயாராக வைத்துள்ளார்.
இதையடுத்து, உசிலம்பட்டி மதுரை ரோட்டில் உள்ள முத்தூட் ஃபைனான்ஸில் பணம் மற்றும் நகையை கொள்ளை அடிக்க திட்டம் போட்டு நேற்று நள்ளிரவில் வங்கியின் பூட்டை தனது உபகரணங்களால் உடைக்க முயற்சித்துள்ளார்.
அப்போது, போலீஸ் ரோந்து வாகனம் வரவே ஓடி ஒளிந்துள்ளார். ரோந்து சென்ற எஸ்எஸ்ஐ சாந்தி மற்றும் காவலர் அன்பு குமார் ஆகியோர் வங்கியிலிருந்து யாரோ ஒருவர் தப்பி ஓடுவதைப் பார்த்து, வாகனத்தை நிறுத்திவிட்டு வங்கி அருகில் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது முத்தூட் வங்கி பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
வங்கியின் முன்பு, இருசக்கர வாகனம் ஒன்று இருந்துள்ளது. அதில் பூட்டை உடைக்க பயன்படுத்தும் உபகரணங்களும் இருப்பதைப் பார்த்தனர். இதையடுத்து, கொள்ளை அடிக்கும் கும்பல் என்பதை அறிந்து கொண்ட அவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இருட்டில் பதுங்கி இருந்த லெனினை பிடித்தனர். விசாரணையில் லெனின் முத்தூட் வங்கி பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட லெனினிடம் விசாரித்ததில் அவர் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்ததும், கடனை திருப்பி கட்டுவதற்காக கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications