மங்களூர் ஆட்டோ குக்கர் குண்டுவெடிப்பு- பயங்கரவாதியின் தமிழக கூட்டாளிகள் யார்? வலைவீசி தேடும் என்.ஐ.ஏ
மங்களூர்: தமிழகத்தில் கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தின் அதிர்வுகள் அடங்குவதற்குள் கர்நாடகாவின் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டுவெடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தமிழக பயங்கரவாதிகளை வலைவீசி தேடி வருகின்றனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள்.
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பாக கார் சிலிண்டர் வெடித்தது. இச்சம்பவத்தில் முபின் என்பவர் உயிரிழந்தார். மேலும் சம்பவ இடத்தில் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள் கிடந்தன. இதனால் சந்தேகம் ஏற்பட்டு முபின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருட்கள் சிக்கின. இதனைத் தொடர்ந்து இந்த பயங்கரவாத செயலில் தொடர்புடைய 6 பேர் சிக்கினர்.

கோவை பாணியில் மங்களூர்
தமிழகத்தை மட்டுமல்ல நாட்டையே இச்சம்பவம் அதிர வைத்தது. தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. இச்சம்பவத்தை விசாரித்து வருகிறது. இந்த அதிர்வுகள் அடங்குவதற்குள் இதே பாணியில் கர்நாடகாவின் மங்களூர் நகரில் ஆட்டோ குக்கர் வெடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மங்களூர் நாகுரி பகுதியில் ஆட்டோ ஒன்று திடீரென வெடித்த பொருளால் பற்றி எரிந்தது. இதில் ஆட்டோவில் இருந்த பயணி ஷரீக்கும் ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.

பயங்கரவாத சதி
அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது குக்கரில் ஒயர்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இது விபத்து அல்ல- பயங்கரவாத செயல்தான் என கர்நாடகா அரசு அறிவித்தது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மிகப் பெரிய சதியின் ஒரு அடையாளம்தான் இந்த குக்கர் குண்டுவெடிப்பு என கர்நாடகா போலீசார் திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆட்டோவில் கிடைத்த பொருட்களை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது.

போலி ஆதார், கோவை சிம்கார்டு
இந்த விசாரணையில் போலி ஆதார் அட்டை, போலி சிம் கார்டு ஆகியவற்றை ஆட்டோவில் வந்த பயணி ஷரீக் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. ரயில்வே ஊழியர் ஒருவர் தொலைத்த ஆதார் அட்டையை அந்த நபர் பயன்படுத்தி இருக்கிறார் என்பது உறுதியானது. அந்த நபர் பயன்படுத்திய சிம்கார்டு தமிழ்நாட்டின் கோவையில் இருந்து வாங்கப்பட்டிருப்பதும் அம்பலமாகி இருக்கிறது. ஆகையால் மங்களூர் குண்டுவெடிப்புக்கும் கோவைக்குமான தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஷரீக்கின் வீட்டிலும் போலீசார் விசாரணை மற்றும் தேடுஹ்டல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தமிழக கும்பல் தொடர்பு?
அத்துடன் கோவை சிம் கார்டு வைத்து அதன் நடமாட்டம் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிம்கார்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் செல் போ டவர்களை வெளிப்படுத்துகிறது. இதனால் மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழக பயங்கரவாத கும்பலுக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் மங்களூர்-கோவை சம்பவ தொடர்புகள், கூட்டாளிகள் யார் யார் என வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications