36 மணி நேரம்.. சரி பண்ணிட்டோம்! மின் விநியோகத்தில் அவசரப்பட முடியாது! அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
மயிலாடுதுறை : சீர்காழி தாலுக்கா பகுதியில் அதீத கன மழை பெய்த பிறகு 36 மணி நேரத்தில் 2லட்சத்து 3ஆயிரம் மின் இணைப்புகளுக்கு சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 11ஆம் தேதி சீர்காழி தாலுக்கா பகுதியில் அதீத கன மழை பெய்தது. இதனால் சீர்காழி தாலுகா பகுதியில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கடலூர், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.

மழை பாதிப்பு
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பல வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. மேலும் சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சுமார் 6,000 ஏக்கர் சம்பா நெல் பயிர் நடவு செய்யப்பட்ட மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இந்நிலையில் மழை பாதிப்புகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் நேரடியாக ஆய்வு நடத்தினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பலாஜி," மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மின் விநியோகத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் கடந்த 36 மணி நேரத்தில் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பணியாளர்களால் சரி செய்யப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்து 6 ஆயிரம்521 மின் இணைப்புகளில் 2 லட்சத்து 3021 மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம்
மீதமுள்ள 3500 மின் இணைப்புகளுக்கு இன்று இரவுக்குள் மின் விநியோகம் வழங்கப்படும். இந்த அதித மழையால் 321 மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 300 கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மின்விநியோகம் தாமதமாக வழங்கப்படும் 29 இடங்களில் தண்ணீர் வடிந்த பிறகு மின்விநியோகம் சீரமைக்கப்படும்

அவசரப்பட முடியாது
2522 மின்மாற்றிகளில் 2541 மின்மாற்றிகளில் சீரமைக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு பயன்படும் 51 மின்மாற்றிகள் சீரமைக்க உள்ளது. மின்விநியோகத்தில் அவசரப்பட முடியாது. முழுவதுமாக தண்ணீர் வடிந்து அப்பகுதியில் எந்த மின்விபத்தும் ஏற்படாத வகையில் ஆய்வு செய்து முழுமையாக மின் வினியோகம் வழங்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications