முல்லை பெரியாறு அணை வழக்கு: அணை பலமாக இருக்கிறது விரிசல் இல்லை:தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில்
கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, நீர் கசிவு தரவுகள், அணை ஆயுள் தொடர்பாக கேள்விகளோடு தாக்கல் செய்த மனு மற்றும் மத்திய அரசின் அணை இயக்க முறை நிலை அறிக்கை தொடர்பாக எழுப்பிய சந்தேகங்களுக்கும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது
கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் தாக்கல் செய்த மனு எந்த அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லாத ஒன்று, அணை இயக்கமுறை (ரூல் கர்வ்) தொடர்பாக மத்திய நீர் ஆணையம் தாக்கல் செய்த நிலை அறிக்கை என்பது பல்வேறு கட்ட விவாதங்கள், தரவுகள் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகும்
142 அடிக்கு கீழே நீரை தேக்க கோரும் கேரள கோரிக்கை ஏற்க முடியாது
மேலும் 142 அடிக்கு கீழாக நீரை தேக்க வேண்டும் என்ற மனுதாரர் மற்றும் கேரளாவின் கோரிக்கை ஏற்க முடியாது, இது ஏற்கனவே நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தமிழகத்தின் உரிமையில் தலையிடுவது ஆகும். மேலும் அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவின் தரவுகள் கண்மூடித்தனமாக ஏற்று கொள்ளப்பட்டவை என்று கூறுவது தவறானது.
அணைக்கு வயது பொருட்டல்ல
மனுதாரர் ஜாய் ஜோசப் சுட்டிக்காட்டிய கனடா பல்கலைகழக ஆய்வு படி அணையின் வயது காரணமாக அது அபாயகரமானது எனக் கூறுவது தவறு, ஏனெனில் அதே பல்கலைக்கழக ஆராய்ச்சியில் அணையின் பலவீனம், செயலிழப்பு என்பது அதன் வயதை வைத்து கணக்கிட முடியாது எனவும் கூறியுள்ளது.
152 அடி அவரை தாராளமாக தேக்கி வைக்கலாம்
மேலும் முல்லை பெரியாறு அணை நில அதிர்வுகளை தாங்குமா என்பது மத்திய அரசின் நீர் மற்றும் ஆற்றல் ஆய்வு மையத்தால் ஆய்வு செய்யப்பட்டது, அதில் அணை நில அதிர்வுகளை தாங்கும் எனவும் அணையில் 152 அடி வரை நீரை தேக்கலாம் என அறிக்கை அளிக்கப்பட்டது.
அதேபோல அணை நில நடுக்கத்தை தாங்குமா, பெருவெள்ளத்தை தாங்குமா, கட்டமைப்பு ரீதியாக பலமாக உள்ளதா, நீர் கசிவு எந்த அளவு உள்ளது என 40 முறை அணையில் சோதனை நடத்தப்பட்டு அணை பலமாக உள்ளது என பாதுகாப்பு குழு தெரிவித்ததை உச்சநீதிமன்றமும் கடந்த 2014 ல் ஏற்றுக்கொண்டது.
விரிசல் இல்லை, ஆயுள் பிரச்சினையும் இல்லை
முல்லை பெரியாறு அணை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது, மேலும் அணையில் எந்த விரிசல்களும் இல்லை என்பதை தொழில்நுட்ப குழு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு அணையின் ஆயுள் என்பது வரையறுக்கப்படவில்லை, ஆனால் அணையின் ஆயுள் என்பது அதன் பராமரிப்பு, புனரமைத்தல், புத்தாக்கம் உள்ளிட்ட நடவடிக்கையில் தான் உள்ளது என நிபுணர் குழு ஏற்கனவே தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் அணை வேறு..முல்லைப்பெரியாறு அணை வேறு
மேலும் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட அணை பாதிப்பையும் முல்லைபெரியாறு பகுதியையும் ஒப்பிட முடியாது, ஏனெனில் முல்லை பெரியாறு அமைந்திருப்பது நிலநடுக்க பதிப்பு குறைவாக உள்ள 3 ஆம் மண்டலத்தில் ஆகும்.
ஆதாரம் இல்லாமல் பொய்யை பரப்புகின்றனர்
முல்லைப்பெரியாறு அணை கட்டும்போது அதன் ஆயுள் 50 ஆண்டுள் மட்டுமே என மனுதாரர் கூறுவது முற்றிலும் தவறான கூற்று, எந்த அடிப்படை ஆதாரம், தரவுகள் இல்லாமல் வெறுமனே கூறுகின்றனர். மேலும் அணையின் நீர் கசிவு தரவுகள், அணையின் நிலவரம், நீர் வரத்து, வெளியேற்றம், நீர் திறப்பு நீர் தேக்குதல் உள்ளிட்ட தரவுகள் அனைத்தும் கேரள அரசுக்கு அவ்வப்போது தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டுள்ளது
நல்ல நிலையில் உள்ள கண்காணிப்புக்கருவிகள்
அதேபோல் அணையில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கருவிகள் செயல்பாட்டிலேயே தான் உள்ளன, அது பழுதாக இல்லை..அதை அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு மற்றும் அதன் துணைக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் முடிந்தவுடன் ஏற்கனவே உள்ள பழைய தொழில்நுட்ப கருவிகள் மாற்றப்பட்டு புதிய கருவிகள் நிறுவப்படும், இது ஏற்கெனவே நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட ஒன்று.
நீதிமன்றத்தை தவறாக வழி நடத்த முயலும் ஜாய் ஜோசப்
எனவே மனுதாரர் ஜாய் ஜோசப் தாக்கல் செய்த மனு உள்நோக்கம் கொண்டது, இது அணையில் நீர் தேக்கம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த விடாமல் தடுக்கும் ஒரு முயற்சி ஆகும்.மேலும் தவறான தகவல்கள், தரவுகளை தந்து நீதிமன்றத்தை தவறாக நடத்த முயல்கிறார்.
அணைத்திறப்பில் முறைப்படி கேரள அரசுக்கு தெரிவிக்கப்படுகிறது
அணை விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து நடைமுறைகளையும் கச்சிதமாக திட்டமிட்டு கடைபிடித்து வருகிறது, அணையில் நீர் திறப்பது என்பது கேரள அரசுக்கு முன்கூட்டியே அறிவித்த பின்னர் தாக் அணை மதகுகள் திறக்கப்படுகின்றன. எனவே ஏற்கனவே அணை இயக்க முறை தொடர்பாக மத்திய நீர் வள ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று இந்த மனுக்களை முடித்து வைக்க வேண்டும், என தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.