கோடிகளை கொட்டி இளம் வயது பையனுடன் 'டேட்டிங்' செய்ய ஆசைப்பட்ட 63 வயது பெண்.. திடீர் திருப்பம்
மும்பை: மும்பையைச் சேர்ந்த 63 வயதாகும் கோடீஸ்வர மூதாட்டிக்கு இளம் பையனுடன் டேட்டிங் செய்ய ஆசைப்பட்டுள்ளார். அதற்காக சர்வதேச அளவில் இண்டர்நேஷனல் கியூபிட் என்ற 'டேட்டிங்' செயலியில் பதிவு செய்துள்ளார். அப்படி பதிவு செய்த மூதாட்டியை ஏமாற்றிய கும்பல்,அவரிடம் ரூ.1 கோடியே 30 லட்சத்தை ஏமாற்றி உள்ளது. அவர்களை மும்பை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மும்பையை சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவருக்கு இளம் பையனுடன் டேட்டிங் செய்ய ஆசை பிறந்துள்ளது. இதற்காக அவர், இண்டர்நேஷனல் கியூபிட் என்ற 'டேட்டிங்' ஆப்பில் தனது விவரங்களை பதிவு செய்திருக்கிறார். அந்த ஆப் மூலம் கடந்த ஆண்டு பால் ரூதர்போர்டு என்ற நபரின் அறிமுகம் மூதாட்டிக்கு கிடைத்துள்ளது. அவர் அமெரிக்கா நாட்டில் என்ஜினீயராக இருக்கிறார், தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றி வருவதாகவும் மூதாட்டியிடம் கூறியுள்ளார். பின்னர் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு நட்பாக பேசி வந்துள்ளார்கள்.

இந்தநிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் என்ஜினியராக உள்ள பால் ரூதர்போர்டு , தனது கட்டுமான தளத்தில் விபத்து ஏற்பட்டதால், தன்னை அந்த நாட்டு அரசு அமெரிக்காவுக்கு நாடு கடத்த உள்ளதாகவும், இதனை தவிர்க்க தனக்கு பணம் தேவைப்படுவதாக மூதாட்டியிடம் உருக்கமாக பேசினாராம்.
இதனை உண்மை என்று நம்பிய மூதாட்டி கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் பிட்காயின் வடிவில் பல லட்சம் ரூபாயை பால் ரூதர்போர்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். நாடு திரும்பியவுடன் நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருவதாக முதாட்டியிடம் உறுதி அளித்தார். சில நாட்கள் கழித்து 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அடங்கிய பார்சலை அனுப்பி உள்ளதாக பால் ரூதர்போர்டு மூதாட்டியிடம் கூறினாராம்.
இதனால் மூதாட்டி பார்சலை எதிர்பார்த்து காத்து இருந்தார். அப்போது டெல்லி விமான நிலைய அதிகாரி என கூறி ஒருவர் மூதாட்டியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது விலை உயர்ந்த பார்சல் ஒன்று வந்திருப்பதாகவும், இதற்கான சுங்க வரியை செலுத்தினால் உடனடியாக அனுப்பி வைப்பதாக கூறியிருக்கிறார். இதன்படி அவர் கேட்ட பணத்தையும் மூதாட்டி அனுப்பிவைத்துள்ளார். இதேபோல அமெரிக்கா வங்கி அதிகாரி, ஐ.எம்.எப். அதிகாரி, ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் இருந்து பேசுவதாக கூறி பல பேர் மூதாட்டியிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 30 லட்சம் வரையில் வாங்கியிருக்கிறார்கள். வரிசையாக பலர் தன்னிடம் பணம் பறிப்பதை கண்ட, மூதாட்டிக்கு தான் ஏமாற்றப்படுவதை தாமதமாகவே உணர்ந்துள்ளார்.
இதுபற்றி மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசில் மூதாட்டி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, 'டேட்டிங்' செயலி மூலம் நூதன முறையில் மூதாட்டியிடம் ரூ.1 கோடியே 30 லட்சம் மோசடி செய்த கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications