‛‛மகாராஷ்டிராவில் மாஸ்’’.. எம்எல்சி தேர்தலில் ஸ்வீப் செய்த பாஜக கூட்டணி! அப்போ ‛இந்தியா’ கூட்டணி?
மும்பை: மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் இன்று 11 இடங்களுக்கு நடந்த மகாராஷ்டிரா சட்ட மேலவை தேர்தலில் 12 பேர் போட்டியிட்டனர். இதில் எம்எல்ஏக்கள் கட்சி மாறி ஓட்டளிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் பாஜக கூட்டணியில் களமிறங்கிய 9 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட்ட 3 பேரில் 2 பேர் மட்டுமே வென்றனர்.
நாடாளுமன்றத்தில் லோக்சபா (மக்களவை), ராஜ்யசபா (மாநிலங்களவை) என்று 2 சபைகள் உள்ளன. இதில் லோக்சபா எம்பிக்கள் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். மாறாக ராஜ்யசபா எம்பிக்கள் என்பவர்கள் ஒவ்வொரு மாநில எம்எல்ஏக்கள் ஓட்டளித்து தேர்வு செய்கின்றனர்.

அதேபோல் கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் என பல மாநிலங்களில் சட்டசபை, சட்ட மேலவை என்பது நடைமுறையில் உள்ளது. இதில் சட்டசபையில் எம்எல்ஏக்கள் இருப்பார்கள். சட்ட மேலவையில் எம்எல்சிக்கள் இருப்பார்கள். அதாவது எம்எல்சிக்கள் என்பவர்கள் மாநிலத்தில் உள்ள எம்எல்ஏக்களால் ஓட்டளித்து தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் காலியாக உள்ள 11 எம்எல்சி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் என்பது இன்று நடந்தது. மகாராஷ்டிராவை பொறுத்தமட்டில் 2 கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒன்று என்டிஏ எனும் பாஜக கூட்டணி. இந்த கூட்டணி மகாராஷ்டிராவில் ‛மகாயுதி' கூட்டணி என அழைக்கப்படுகிறது.
இந்த கூட்டணி தான் ஆளும் கட்சியாக உள்ளது. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த கூட்டணியில் உள்ளன. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். மறுபுறம் பார்த்தால் ‛இந்தியா' கூட்டணி. இந்த கூட்டணியில் காங்கிரஸ், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி), சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) ஆகியவை உள்ளன. இந்த கூட்டணி ‛மகா விகாஸ் அகாடி' என அழைக்கப்படுகிறது.
எம்எல்சி தேர்தலில் எம்எல்ஏக்களின் ஓட்டுகள் தான் வெற்றியை நிர்ணயம் செய்யும். அந்த வகையில் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் தற்போது 14 இடங்கள் காலியாக உள்ளன. மீதமுள்ள 274 எம்எல்ஏக்களில் பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு 103 எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 38 எம்எல்ஏக்கள், துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 42 எம்எல்ஏக்கள் என மொத்தம் 173 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
மேலும் சிறிய கட்சிகளின் எம்எல்ஏக்களை சேர்த்து பாஜக கூட்டணிக்கு மொத்தம் 201 பேர் பாஜக கூட்டணியில் உள்ளன. மாறாக ‛இந்தியா' கூட்டணியை எடுத்து கொண்டால் காங்கிரஸ் கட்சிக்கு 37 எம்எல்ஏக்கள், உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கு 15 எம்எல்ஏக்கள், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள் என்று என்று மொத்தம் 62 எம்எல்ஏக்கள் உள்ளன.
இதனால் மொத்தமுள்ள 11 எம்எல்சிக்கள் பதவியில் 9 வேட்பாளர்களை பாஜக கூட்டணி நிறுத்தியது. கட்சி வாரியாக பார்த்தால் பாஜகவில் 5 பேர், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா சார்பில் 2 பேர், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் சார்பில் 2 பேர் என 9 பேர் நிறுத்தப்பட்டனர். இதில் ஒருவருக்கு 23 ஓட்டுகள் வேண்டும் என்ற நிலையில் இவர்கள் அனைவரும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டது.
மாறாக பாஜக ஆதரவு எம்எல்ஏக்களின் உதவியுடன் வெல்லும் முனைப்பில் ‛இந்தியா' கூட்டணி 3 வேட்பாளர்களை நிறுத்தியது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகியோர் தலா ஒரு வேட்பாளர்களை அறிவித்த நிலையில் சரத்பவார் கட்சி சார்பில் 3 வது வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதனால் கட்சி மாறி ஓட்டளிப்பதை தடுக்க இருதரப்பும் தங்களின் எம்எல்ஏக்களை ரெசார்ட்டில் தங்க வைத்தன.
இத்தகைய சூழலில் தான் இன்று நடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட 9 வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். அதேவேளையில் ‛இந்தியா' கூட்டணியில் களமிறங்கிய காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மாறாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications