உடலில் நடுக்கம்.. "ஓ" என்ற சத்தம்.. ஏர் இந்தியா விமானத்தில் பலியான நபர்.. நடுவானில் திகில் சம்பவம்!
மும்பை: மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் நடு வானில் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
கொரோனா பாதிப்பிற்கு இடையே வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகிறது. இதற்காக ஏர் இந்தியா விமானங்கள் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை பல நாடுகளில் இருந்து வரிசையாக இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டு உள்ளனர். இன்னும் பலர் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வருகிறது.

இந்தியா வந்தனர்
இந்த நிலையில் நைஜீரியாவில் இருக்கும் லாகோஸ் பகுதியில் இருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நபரின் வயது 42தான் ஆகிறது. இந்த விமானம் இன்று அதிகாலை 4 மணிக்கு மும்பை விமானம் வந்துள்ளது. நேற்று இரவு லாகோசில் இருந்து புறப்பட்டு இருக்கிறது.

சோதனை செய்துவிட்டு வந்தார்
இந்த பயணியை முழுமையாக சோதனை செய்துவிட்டுத்தான் விமானத்தில் ஏற்றி இருக்கிறார்கள். தெர்மல் சோதனை, கொரோனா அறிகுறி சோதனை எல்லாம் செய்து இருக்கிறார்கள். விமானத்தில் ஏறும் வரை அவர் நன்றாகவே இருந்துள்ளார். ஆனால் விமானத்தில் ஏறிய பின் அவர் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. அவர் குளிரில் கடுமையாக நடுங்கி இருக்கிறார்.

சத்தம்
குளிரில் நடுங்கி அருகில் இருந்த பயணிகளிடம் உதவி கேட்டு உள்ளார். ஆனால் இவருக்கு கொரோனா இருக்கிறது என்று யாரும் உதவிக்கு வரவில்லை. இந்த நிலையில் விமானத்திலேயே ஓ என்று சத்தம் போட்டு உள்ளார். அதன்பின் மூச்சு விட முடியாமல் திணறி இருக்கிறார். இதையடுத்து உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.

ஆனால் நிலைமை மோசம்
ஆனால் அவருக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டும் நிலைமை மோசம் அடைந்தது. உயிருக்கு போராடிய நிலையில் அங்கு இருந்த மருத்துவர் ஒருவர் அவருக்கு உதவி உள்ளார். அந்த நபர் தனக்கு மலேரியா இருக்கிறது. அதனால்தான் மூச்சு விட முடியவில்லை என்று கூறியுள்ளார். இந்த நிலையில் பறக்கும் விமானத்திலேயே அவர் உயிருக்கு போராடி பின் பலியாகி உள்ளார்.

என்ன விளக்கம்
இது தொடர்பாக ஏர் இந்தியா விளக்கம் கொடுத்துள்ளது. அதில், ஏர் இந்தியா விமானம் AI1906ல் வந்த பயணிகள் நடுவானில் மரணம் அடைந்து இருக்கிறார், இவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இவரின் மரணம் இயற்கையானதுதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த விமானத்தில் பயணித்த நபர்கள் இடையே இதனால் கடும் அச்சம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications