அதானி சொத்து மதிப்பு ஒரே நாளில் ‘விர்ர்ர்ர்’.. செபி அறிக்கையால் ரூ.299 கோடி உயர்வு!
மும்பை: ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டு தவறானது என செபி அறிவித்த பிறகு அதானி குழும பங்குகளின் மதிப்பு பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டது. இதன் காரணமாக அதானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.299 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் அதானி, துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானிக்கு பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில் அதானி குழுமத்தில் மோசடி அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறை எதுவும் நடைபெறவில்லை என இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நிராகரித்துள்ளது.

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு குற்றம் சாட்டியது. முக்கியமாக வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி அவற்றின் மூலம் அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்து செயற்கையாக விலை ஏற்றியதாகக் குற்றம்சாட்டியது. அதையடுத்து அதானி குழும பங்குகளின் விலை மற்றும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடுமையாகச் சரிந்தது.
ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு 'செபி' உத்தரவிட்டது. இந்நிலையில், விசாரணை அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்ட செபி, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டு தவறானது என அறிவித்தது. அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என செபி கூறியது. இதை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகளின் விலை உயர்ந்தது.
இதன் விளைவாக அதானி குழுமப் பங்குகளின் சந்தை மூலதனத்தில் ₹ 69,000 கோடி உயர்வு ஏற்பட்டது. அதானி பவர் பங்கு விலை, தேசிய பங்குச் சந்தையில் 13.42% உயர்ந்து ஒரு பங்கு விலை ரூபாய் 416.10 ஆக முடிந்தது. NSE-யில் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை 7.55% உயர்ந்து ரூபாய் 652.80 ஆக முடிந்தது. அதானி எண்டர்பிரைஸ் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 5% க்கும் அதிகமாக உயர்ந்தன.
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் பங்குகள் வார இறுதி அமர்வில் கிட்டத்தட்ட 5% அதிகரித்தன. அதானி குழுமத்தின் சந்தை மூலதனத்தில் ஏற்பட்ட இந்த உயர்வின் காரணமாக, கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூபாய் 299 கோடி அதிகரித்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்டில், கவுதம் அதானி, அவரது குடும்ப உறுப்பினர்கள் 67,28,25,211 பங்குகளை வைத்துள்ளனர். இதில் ஒவ்வொரு பங்கும் வெள்ளிக்கிழமை ₹ 126 அதிகரித்துள்ளது. இதன் மூலம் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் உயர்வு கவுதம் அதானியின் நிகர மதிப்பு ரூபாய் 8,477.60 கோடியாக அதிகரித்துள்ளது.
இப்படியாக, ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டுகள் தவறானவை என செபி அறிவித்த பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் உயர்ந்ததால் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு ரூபாய் 299.41 கோடி உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications