மின்துறையில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு! 45 ஜிகாவாட் டார்கெட்.. அதானியின் மெகா பிளான்
மும்பை: இந்தியாவின் மின்சார எதிர்காலத்தை முழுமையாக மாற்றும் வகையில், அதானி குழுமம் மிகப்பெரிய எரிசக்தி திட்டத்தை அறிவித்துள்ளது. சூரிய மின்சாரம், நீர்மின், அனல்மின், இயற்கை எரிவாயு, ஹைட்ரஜன், அணுமின் என அனைத்து துறைகளிலும் ஒரே நேரத்தில் முதலீடு செய்யும் திட்டத்தை அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி வெளியிட்டுள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 45 ஜிகாவாட் (GW) மின்சார உற்பத்தி திறனை உருவாக்கும் இலக்கை அதானி குழுமம் நிர்ணயித்துள்ளது. இதற்காக மட்டும் சுமார் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.

ஏன் இவ்வளவு பெரிய திட்டம்?
45 ஜிகாவாட் என்பது சாதாரண விஷயம் அல்ல. இது பல மாநிலங்களின் மொத்த மின்சார தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு பெரிய திறன் ஆகும். தனியார் துறையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மின் உற்பத்தி விரிவாக்க திட்டமாக இது கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் தற்போது போர்கள், அரசியல் பதற்றங்கள், எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பல நாடுகள் எரிசக்தி பாதுகாப்பை முக்கியமாக பார்க்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில், "இந்தியாவுக்கு தேவையான மின்சாரம் இந்தியாவிலேயே உருவாக வேண்டும். வெளிநாடுகளை அதிகமாக சார்ந்து இருக்கக் கூடாது" என்பதே அதானி குழுமத்தின் நோக்கமாக கூறப்படுகிறது.
சூரிய மின்சாரம் முதல் அணுமின் வரை!
பெரும்பாலான நிறுவனங்கள் ஒரு அல்லது இரண்டு துறைகளில் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் அதானி குழுமம் சூரிய மின்சாரம், காற்றாலை மின்சாரம், அனல்மின், நீர்மின், இயற்கை எரிவாயு, ஹைட்ரஜன், அணுமின் என அனைத்து துறைகளிலும் ஒரே நேரத்தில் முதலீடு செய்து வருகிறது. அதாவது எதிர்காலத்தில் எந்த வகையான மின்சாரத் தேவை அதிகரித்தாலும் அதை சமாளிக்கக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் சுரங்க நிறுவனம்
மின்சாரம் தயாரிக்க நிலக்கரி முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது 4 புதிய Mine Developer and Operator (MDO) ஒப்பந்தங்கள் மூலம் அதானி குழுமத்தின் சுரங்க உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 145 மில்லியன் டன் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் சுரங்க நிறுவனமாக அதானி குழுமம் மேலும் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
மின்சாரம் உற்பத்தி செய்வது மட்டுமல்ல, அதை குறைந்த இழப்பில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு கொண்டு செல்லவும் வேண்டும்.இதற்காக Khavda-South Olpad HVDC என்ற மிகப்பெரிய திட்டத்தை அதானி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.HVDC (High Voltage Direct Current) தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் மிகவும் குறைந்த இழப்பில் நீண்ட தூரங்களுக்கு அனுப்ப முடியும். இந்த தொழில்நுட்பத்தில் திறன் நிரூபித்துள்ள இந்தியாவின் ஒரே தனியார் நிறுவனம் அதானி என கூறப்படுகிறது.
அணுமின் துறையிலும் அதிரடி!
சுத்தமான மின்சார உற்பத்தியை அதிகரிக்க, பூடான் நாட்டின் Druk Green Power Corporation நிறுவனத்துடன் இணைந்து 5,000 மெகாவாட் நீர்மின் திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இது இந்தியா-பூடான் இடையேயான எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைவரது கவனத்தையும் ஈர்த்த அறிவிப்பு அணுமின் திட்டம் தான். Adani Atomic Energy என்ற பிரிவின் மூலம் 2035ஆம் ஆண்டுக்குள் 10 ஜிகாவாட் அணுமின் திறன் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் அணுமின் துறையில் அதிகமாக செயல்படாத நிலையில், அதானியின் இந்த முயற்சி மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு
Adani Total Gas நிறுவனம் மூலம் தற்போது 11 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு Piped Natural Gas (PNG) இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிலிண்டர் தேவையில்லாமல், நேரடியாக குழாய் வழியாக எரிவாயு வீடுகளுக்கு கிடைக்கிறது. நிலக்கரி சுரங்கம் முதல் சூரிய மின்சாரம் வரை, நீர்மின் முதல் அணுமின் வரை, எரிவாயு விநியோகம் முதல் மின்சார பரிமாற்றம் வரை எரிசக்தி துறையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதானி குழுமம் தனது பங்களிப்பை அதிகரித்து வருகிறது.
ரூ.2 லட்சம் கோடி முதலீடு, 45 ஜிகாவாட் புதிய மின் உற்பத்தி இலக்கு, 10 ஜிகாவாட் அணுமின் திட்டம், 5,000 மெகாவாட் நீர்மின் கூட்டாண்மை போன்ற அறிவிப்புகள், இந்தியாவின் எதிர்கால எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் மிகப்பெரிய திட்ட வரைபடமாக பார்க்கப்படுகின்றன. எளிமையாக சொன்னால், "இந்தியாவுக்கு தேவையான மின்சாரத்தை இந்தியாவே உற்பத்தி செய்து, உலகளவில் எரிசக்தி தன்னிறைவு பெற்ற நாடாக மாற வேண்டும்" என்ற இலக்கை நோக்கி அதானி குழுமம் சென்று வருகிறது.












Click it and Unblock the Notifications