சமையலறையில் ரத்த வெள்ளத்தில் பானுமதி.. 16 வருடங்கள் கழித்து திடீரென சிக்கிய கொலையாளி.. "சிலை கர்மா!"
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 1997ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை 16 ஆண்டுகள் கழித்து காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குற்றவாளியை காவல்துறை 2013ம் ஆண்டு கைது செய்திருந்தனர். ஆனால் தற்போது வரை இந்த வழக்கு குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
குற்றவாளி தனது விநோதமான நடத்தைகள் மூலம் தானே மாட்டிக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1997ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதியன்று மும்பையில் உள்ள சியோன் எனும் பகுதியில் 58 வயதான பானுமதி தக்கர் எனும் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது வீட்டில் இருந்த ரூ.2.55 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. சம்பவம் நடந்த அடுத்த நாள் அந்த வீட்டின் பணியாளர்களில் ஒருவர் கதவை திறக்க முற்பட்டபோது கதவு ஏற்கெனவே திறந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பானுமதியை அழைத்த போது வீட்டின் உள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. உள்ளே சென்று பார்த்தபோது சமையலறையில் ரத்த வெள்ளத்தில் பானுமதி சடலமாக கிடந்துள்ளார். அப்போதுதான் கொலை பற்றி தெரியவந்தது.

விசாரணை
சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் பானுமதி கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்திய நிலையில் பானுமதியின் கணவர் நகை வியாபாரி என்பதும், இவர் துபாயில் இருக்கிறார் என்பதும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்தியா வந்து செல்கிறார் என்பது தெரியவந்தன.

வழக்கு
இவர்களுக்கு ஒரே ஒரு மகன் மட்டுமே இருக்கிறார். இவர் புனேவில் வசித்து வருவதால் பானுமதி தனியாகதான் வசித்து வந்துள்ளார். இப்படியாக விசாரணையில் எந்த விஷயமும் வெளிச்சத்திற்கு வராத நிலையில், கடைசியாக வேறு வழியின்றி 1998ல் நீதிமன்றத்தில் ஏ-கிளாசிஃபைட் அறிக்கையை தாக்கல் செய்து வழக்கை காவல்துறை முடித்துக்கொண்டது. மகாராஷ்டிரா முழுவதும் அக்காலகட்டத்தில் இவ்வழக்கு பரபரப்பாக பேசப்பட்டது.

ரகசிய தகவல்
எல்லாம் முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருக்க 16 ஆண்டுகளுக்கு பின்னர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதாவது, ராய்காட் பகுதியில் ஒருவர் சிலையை வீட்டில் வைத்து அவ்வப்போது வழிபாடு நடத்தி வருவதாகவும், விநோதமாக நடந்துகொள்வதாகவும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அவர்கள் முதலில் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இதற்கு அடுத்து கிடைத்த தகவலையடுத்து காவல்துறை அந்த நபரை பின்தொடர்ந்துள்ளது.

சிலை
தானாஜி எனும் நபர்தான் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வந்துள்ளார். மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே அவர் தூக்கமில்லாமல் அவதிப்படுவதாக சொல்லப்படுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அவர் பாதிரியார் ஒருவரிடம் சென்று பாவமன்னிப்பு கோரியுள்ளார். அப்போது பாதிரியார் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உருவத்தை சிலையாக வைத்து வழிபட்டால் இப்பிரச்னை தீரும் என்று கூறியுள்ளார். தானாஜியும் சிலையை வடித்து வழிபாடு செய்து வந்துள்ளார்.

காட்டி கொடுத்த ஊர் மக்கள்
குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்குள் திடீரென சிலை எப்படி வந்தது என்று அக்கம் பக்கத்தினர் கேள்வியெழுப்பிய நிலையில் தன்னுடைய உறவினர் ஒருவர் மும்பையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்றும் உயிரிழந்த உறவினர் தனது கனவில் வந்து தனக்கு சிலை வைக்க கோரியதாகவும் எனவே சிலை வைத்து வழிபாடு நடத்துவதாகவும் கூறி சமாளித்துள்ளார் தானாஜி. ஆனால், இச்சிலை அமைக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ஊரில் கால்நடைகள் திடீரென உயிரிழந்ததாகவும், குழந்தைகள் நோய்வாய்ப்படுவதாகவும் ஊர் மக்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.

கைது
இப்படியாக விஷயம் வெளியில் கசிந்துள்ளது. இதையடுத்து விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார் தானாஜி. ஆனால் காவல்துறைக்கு மற்றொரு சந்தேகம் கிளம்பியது. இந்த கொலையில் இவர் மட்டும்தான் ஈடுபட்டிருந்தாரா? அல்லது கூட்டாளி இருந்தார்களா என விசாரிக்க தொடங்கினர். சந்தேகம் உண்மையானது. கொலையில் தானாஜியுடன் ஷெலர் என்பவரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார். பின்னர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர். தற்போது இவ்வழக்கு குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications