என்ன ஓரு மத நல்லிணக்கம்.. தேவாலயத்தில் நமாஸ் செய்த முஸ்லிம்கள்.. வியந்து பார்க்கும் மகாராஷ்டிரா
மும்பை: மகாராஷ்டிராவில் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நாசிக்கில் உள்ள ஹோலி கிராஸ் சர்ச்சில் முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து வழங்கப்பட்டதோடு, சர்ச்சில் நமாஸ் செய்ய அனுமதியும் வழங்கப்பட்டது. இதுதொடர்பான படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி உள்ளன.
இந்தியாவில் சமீப காலமாக மதம்சார்ந்த பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறைகளும் நடந்துள்ளன.
சமீபத்தில் நடந்த ராமநவமி ஊர்வலத்தால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியிலும் வன்முறைகள் வெடித்தன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டியாவில் ஒலிபெருக்கி பிரச்சனை
மகாராஷ்டிராவை பொறுத்தமட்டில் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே வலியுறுத்தி வருகிறார். இதை செய்யாவிட்டால் மசூதிகளின் அருகே ஒலிபெருக்கியில் அனுமன் பாடல்கள் ஒலிக்க செய்யப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அங்கும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் ஒற்றுமையை வெளிக்காட்டும் விதமாகவும், மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஹோி கிராஸ் சர்ச்சியில் முஸ்லிம்கள் நமாஸ் செய்துள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:

சர்ச்சில் இப்தார் விருந்து
நாசிக்கில் ஹோலி கிராஸ் சர்ச் உள்ளது. ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம் மக்களின் புனித மாதமான ரமலானையொட்டி அவர்கள் நோன்பிருந்து வருகின்றனர். புதன்கிழமை சர்ச் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்க பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

சர்ச்சில் நமாஸ்
இதையடுத்து இப்தார் விருந்துக்கு முஸ்லிம் மக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வந்திருந்தனர். இப்தார் விருந்து நடைபெற்றது. இந்த வேளையில் நமாஸ் செய்ய வேண்டி அவர்கள் ஒரு அறையை ஒதுக்கும்படி பாதிரியார் வின்சி டிமெல்லோவிடம் கேட்டனர். அதற்கு அவர் சர்ச்சில் நமாஸ் செய்யும்படி கூறினார். இதையடுத்து அவர்கள் சர்ச்சில் நமாஸ் செய்தனர்.

பிரிவினை இல்லை
இதுகுறித்து அஜ்மல் கான் என்பவர் கூறுகையில், ‛‛இப்தார் விருந்துக்கு பிறகு 7 மணிக்கு நமாஸ் செய்ய வேண்டும். இங்கிருந்து மசூதிக்கு செல்ல நேரமாகி விடும் என்பதால் நாங்கள் பாதிரியாரிடம் அறை கேட்டோம். அவர் அறைக்கு பதில் சர்ச்சில் நமாஸ் செய்ய அனுமதித்தார். நாங்கள் நமாஸ் செய்தோம். இதன்மூலம் அனைவருக்கும் ஒன்றை மட்டும் கூறி கொள்ள விரும்புகிறேன். இங்கு நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். எங்களுக்குள் பிரிவினை எதுவுமில்லை'' என்றார். தற்போது இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications