தனிமைப்படுத்தப்பட்ட அஜித் பவார்... 54 என்சிபி எம்.எல்.ஏக்களில் 53 பேர் சரத்பவாருக்கே ஆதரவு
Recommended Video
மும்பை: என்சிபி கட்சியில் துணை முதல்வர் அஜித் பவார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அக்கட்சியின் 54 எம்.எல்.ஏக்களில் 53 பேர் சரத்பவார் தலைமைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
என்சிபி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருப்பதாக பாஜக அறிவித்தது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். என்சிபியின் அஜித் பவார் துணை முதல்வரானார்.
காங்கிரஸ்-சிவசேனா- என்சிபி கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்து எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட கடிதத்தை முறைகேடாக பயன்படுத்திதான் இப்புதிய ஆட்சி அமைந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் புதிய அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
என்.சி.பி.யில் 12 எம்.எல்.ஏக்கள் அஜித்பவாரை ஆதரிப்பதாக கூறப்பட்டது. ஆனால் சனிக்கிழமையன்று 5 எம்.எல்.ஏக்கள்தான் கட்சி தலைமையுடன் தொடர்பில் இல்லாமல் இருந்தனர். இவர்களில் 3 பேர் டெல்லியில் இருந்ததை நேற்று நள்ளிரவு என்சிபி கண்டுபிடித்தது.
டெல்லியில் இருந்த 2 எம்.எல்.ஏக்களை மீட்டு மும்பைக்கு கொண்டுவந்தது என்சிபி
இம்மூவரில் 2 பேர் மும்பைக்கே அழைத்து வரப்பட்டுவிட்டனர். மேலும் 2 எம்.எல்.ஏக்கள் தாங்கள் சரத்பவாரைத்தான் ஆதரிக்கிறோம் எனவும் தெரிவித்துவிட்டனர். தற்போதைய நிலையில் என்சிபியின் 54 எம்.எல்.ஏக்களில் 53 பேர் சரத்பவார் தலைமைக்கே ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
இன்றைய உச்சநீதிமன்ற விசாரணையில் சிவசேனாவின் 56, என்சிபியின் 53, காங்கிரஸின் 44 எம்.எல்.ஏக்கள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 160 எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவு புதிய கூட்டணிக்கே என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் என்சிபி அதிருப்தி தலைவர் அஜித்பவார் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.