மகாராஷ்டிரா அமைச்சரவை நாளை விரிவாக்கம்- மீண்டும் துணை முதல்வராகும் அஜித் பவார்
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. நாளை அமைச்சரவை விரிவாக்கத்தின் போது துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸின் (என்.சி.பி) மூத்த தலைவர் அஜித் பவார் மீண்டும் நியமிக்கப்பட உள்ளார்.
மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதில் இழுபறி ஏற்பட்ட நிலையில் பாஜகவின் பட்னாவிஸ் திடீரென முதல்வரானார்; அவருடன் என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வரானார்.

ஆனால் 80 மணிநேரங்கள் மட்டுமெ இருவரும் பதவியில் நீடித்தனர். அதன்பின் இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். அஜித்பவார் மீண்டும் என்.சி.பி. முகாமுக்கே திரும்பி வந்தார்.
இதனையடுத்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வரானார். அவர் பதவியேற்ற போதும் அமைச்சரவை விரிவாக்கம் முழுமையாக நிறைவடையவில்லை.
இந்நிலையில் மகாராஷ்டிரா அமைச்சரவை நாளை பகல் 1 மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அம்மாநில ஆளுநர் மாளிகை இன்று இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
நாளைய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது என்.சி.பியின் அஜித் பவார், துணை முதல்வராக நியமிக்கப்பட உள்ளார். அவருக்கு உள்துறை இலாகா ஒதுக்கப்பட உள்ளது.
மேலும் என்.சி.பியின் தனஞ்ஜெய் முண்டே (நிதி,திட்டமிட்டல்), ஜயவந்த் பாட்டீல் (நீர்ப்பாசனம்), சகன் புஜ்பால் (ஊரக மேம்பாடு), ஜிதேந்திர ஆவாத் (சமூக நீதி) ஆகியோரும் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெற உள்ளனர். அத்துடன் திலிப் வல்சே பாட்டீல், அனில் தேஷ்முக், ராஜேஷ் டோபே, தத்தா பார்னே, அதிதி தத்காரே ஆகியோரும் அமைச்சர்களாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications