Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“அண்ணாமலை மராட்டியர்களுக்கு மட்டுமல்ல.. தமிழர்களுக்கும் துரோகிதான்!” உத்தவ் சிவசேனா கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா, மும்பை குறித்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் கருத்து, அம்மாநில அரசியலில் கடும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அவருடைய பேச்சு, தமிழக மக்களின் கருத்து கிடையாது என்றும், அண்ணாமலை தமிழின துரோகி எனவும் உத்தவ் சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா விமர்சித்திருக்கிறது.

மும்பையில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற உள்ளது. இதற்காக பாஜக சார்பில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இப்படி இருக்கையில், "மும்பை மகாராஷ்டிராவைச் சேர்ந்தது அல்ல. மும்பைக்கும் மகாராஷ்டிராவுக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விவகாரம்தான் தற்போது மும்பை அரசியலில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

Annamalai BJP shiv Sena

அண்ணாமலைக்கு கண்டனம்

அண்ணாமலையின் பேச்சுக்கு உத்தவ் சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று இக்கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகமான 'சாம்னா' பத்திரிகையில் அண்ணாமலையை விமர்சித்து தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "பாஜகவுக்கும் மராட்டிய அடையாளத்துக்கும் இதுவரை எந்தத் தொடர்பும் இல்லை. சிவசேனாவில் இருந்தபோது தங்களை 'வைரங்கள்' என்று கருதியவர்களும், தற்போது அற்பர்களுடன் சேர்ந்து தங்களது மதிப்பை இழந்துவிட்டனர். கிருபாசங்கர், அண்ணாமலையின் மகாராஷ்டிராவுக்கு எதிரான கருத்துகளை சற்றும் கண்டிக்காத ஆட்சியாளர்களையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் மானமில்லாதவர்கள் என்று கூறாவிட்டால் வேறு என்னவென்று அழைக்க முடியும்?

இவர்கள் மகாராஷ்டிராவின் வீரம் மற்றும் சுயமரியாதையை அவமதித்துள்ளனர். அண்ணாமலை மீண்டும் மும்பைக்கு வந்து அதே கருத்தை மீண்டும் தெரிவிப்பேன் என சவால் விடுத்துள்ளார். இந்த அவதூறான பேச்சு மராட்டிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவும் மகாராஷ்டிராவும்

ஃபட்னாவிஸ்-ஷிண்டே ஆட்சியில் மகாராஷ்டிராவின் கௌரவம் முற்றிலும் சீரழிந்துள்ளது. மராத்தி மொழி, கலாச்சாரம், அடையாளம் போன்றவை காலில் போட்டு மிதிக்கப்பட்டு, இந்த இருவரின் ஊழல் அரசியல் தொடர்கிறது. எந்த அற்பமானவர்கள் மும்பைக்கு வந்து மகாராஷ்டிராவை இழிவுபடுத்துகிறர்கள். ஆனால், மராட்டிய ஆட்சியாளர்களோ வெளிப்படையாக ஆதரவளிப்பது மிகவும் அச்சமூட்டுகிறது.

கேள்விக்கு உள்ளான சுய கவுரவம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவர் அண்ணாமலை, மும்பையில் பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகராகக் களமிறங்கி, 'மும்பை மகாராஷ்டிராவைச் சேர்ந்தது அல்ல. மும்பைக்கும் மகாராஷ்டிராவுக்கும் என்ன சம்பந்தம்?' என்று பிதற்றினார். பாஜகவின் இந்த மகாராஷ்டிராவுக்கு எதிரான கருத்துக்கள் மேடையில் பொழிந்துகொண்டிருந்தபோதும், அங்கே இருந்த பல மராட்டிய பாஜக தலைவர்களுக்குத் துளிகூடக் கோபம் வரவில்லை. இது அவர்களின் சுயகௌரவமற்ற தன்மையின் வெளிப்படையான அறிகுறியாகும்.

தமிழின துரோகி

பாஜகவுக்கும் இந்துத்துவ அல்லது மராட்டிய அடையாளத்துக்கும் எந்தத் தொடர்பும் முன்பிருந்ததில்லை. அதிகாரம் மற்றும் பணத்திற்காக அடிமைகளாக மாறிய இத்தலைவர்கள், மகாராஷ்டிராவின் அவமானத்தை வெளிப்படையாகப் பார்த்து, அதைப் பொறுத்துக்கொள்கிறார்கள். அண்ணாமலை போன்ற ஒருவரை அவரது சொந்தத் தமிழ்நாட்டிலேயே ஒருவரும் மதிப்பதில்லை. தமிழ் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தின் துரோகி என்று அவர் தமிழ்நாட்டிலேயே கருதப்படுகிறார்.

தமிழ்நாட்டின் போராட்டம்

எனவே, அண்ணாமலையின் கருத்து முழுத் தமிழ் மக்களின் அல்லது தமிழ் தேசத்தின் நிலைப்பாடு அல்ல என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாட்டின் இதுவரையிலான முதலமைச்சர்கள் மற்றும் இதர ஆட்சியாளர்கள், மும்பை அல்லது மராட்டிய மக்களைப் பற்றி ஒருபோதும் விஷம் கக்கியதில்லை. தமிழ்நாட்டிலேயே திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் தங்கள் பிராந்திய மற்றும் மொழியியல் அடையாளத்தைக் காக்க இடைவிடாது முயன்று அதற்காகப் போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாடும் மகாராஷ்டிராவும் தோளோடு தோள் நின்று போராடின, இறுதியில் மத்திய அரசு இந்தி திணிப்பு உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டியிருந்தது. தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் ஒருபோதும் மகாராஷ்டிராவுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூடி மறைக்கும் பாஜக

ஆனால், பாஜக அண்ணாமலை போன்ற தலைவர்களை மும்பைக்கு அனுப்பி, அவர்கள் மூலம் மகாராஷ்டிராவுக்கு எதிரான கருத்துக்களைப் பேச வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த அவதூறான பேச்சை மறைத்து சாமளிக்கிறார். மறுபுறம் தற்காலிக முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அடிமைத்தனமான குழுவோ அண்ணாமலை குறித்து ஒரு வார்த்தைகூட பேசத் துணியவில்லை.

ஆதாயம் தேடும் பாஜக

இது குறித்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டபோதிலும், மகாராஷ்டிராவின் ஃபட்னாவிஸ் அரசு தன் அடிமைத்தனமான போக்கைக் கைவிடத் தயாராக இல்லை. அண்ணாமலையின் கருத்து மும்பையில் சிவசேனாவுக்கும் தமிழர்களுக்கும் இடையே மோதலை உருவாக்கி, பிளவை ஏற்படுத்தி, அதன் மூலம் பாஜக ஆதாயம் அடைய வேண்டும் என்பதே பாஜகவின் திட்டமாகத் தெரிகிறது. அண்ணாமலை போன்ற அற்பர்களுடன் சண்டையிடாத ஒரு கோழைப் படையை அமித் ஷா உருவாக்கி, அவர்களுக்கு அதிகாரத்தையும் அளித்தார்.

உண்மையான சிவசேனா

இவர்களும் தங்களை சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேவின் சிந்தனைகளின் வாரிசுகள் என்று கருதுகிறார்கள். இவர்கள் உண்மையாகவே பாலாசாகேப் தாக்கரேவின் சிந்தனைகளின் வாரிசுகளாக இப்பதவிகளில் இருந்திருந்தால், அண்ணாமலையை மும்பையில் இருந்து வெளியேற அனுமதித்திருக்க மாட்டார்கள். மாறாக, பாஜக உடன் கூட்டு சேர்ந்ததன் மூலம், இந்த மக்கள் தங்கள் மராட்டிய அடையாளத்தையும் அதன் பெருமையையும் முழுமையாக இழந்துவிட்டனர்.

இத்தகைய அடிமைத்தனமும் சுயநலமும் கொண்ட ஆட்சியாளர்களிடமிருந்து அண்ணாமலை மீது எவ்வித நடவடிக்கையும் எதிர்பார்க்க முடியாது என்பதே கசப்பான உண்மை" என்று விமர்சித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+