ரூ12,000-க்கு சரக்கடித்துவிட்டு.. பொதுமக்கள் மீது "ஆடி" காரை ஏற்றிய மகாராஷ்டிரா பாஜக தலைவர் மகன்!
மும்பை: மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலேயின் மகன் சங்கேத் பவன்குலேவும் அவரது நண்பர்களும் ரூ12,000-க்கு மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் தாறுமாறாக சொகுசு காரை ஓட்டி வாகனங்கள் மீது மோதியதில் 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கேத் பவன்குலேவை தப்ப விட்ட மகாராஷ்டிரா மாநில போலீசார் அவரது ஓட்டுநரை மட்டும் கைது செய்திருப்பதுதான் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் முடிவடைந்த பின்னர் மகாராஷ்டிரா தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் பாதகமாகவே இருக்கும் என்பது பாஜகவின் கவலை. இதனால் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் எப்படியாவது வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாஜக சிக்கி இருக்கிறது. இதனாலேயே மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைவாகவும் சுமூகமாகவும் முடிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே களமிறங்கி இருந்தார்.
அதேநேரத்தில் ஆட்சியை பறிகொடுத்து, கட்சிகளை பறிகொடுத்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எப்படியும் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதில் தீவிரம் காட்டுகின்றன. இந்த கூட்டணியும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மும்முரமாக உள்ளன.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில பாஜகவுக்கு பெரும் தலைவலியாக உருவானது மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலேயின் மகன் சங்கேத் பவன்குலே விவகாரம். நாக்பூரில் மதுபாரில் இருந்து போதை தலைக்கேறிய நிலையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி அடுத்தடுத்து பல வாகனங்கள் மீத மோதி தொடர் விபத்துகளை ஏற்படுத்தி இருந்தார் சங்கேத். இந்த தொடர் விபத்துகளில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து சொகுசு காரை பறிமுதல் செய்த நாக்பூர் போலீசார் சங்கேத் பவன்குலேவை கைது செய்யாமல் ஓட்டுநரை மட்டும் கைது செய்தார். இந்த வழக்கில் சங்கேத் பெயரைக் கூட போலீசார் சேர்க்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
இந்த நிலையில், நாக்பூர் மதுபாரில் சங்கேத்தும் அவரது நண்பர்களும் ரூ12,000-க்கு மது அருந்தி உள்ளனர். அத்துடன் மாட்டிறைச்சியும் சாப்பிட்டனர். இந்த போதையில்தான் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார் சங்கேத் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்த போது, ரூ12,000-க்கு சங்கேத்தும் அவரது நண்பர்களும் மது அருந்தியது உண்மைதான். ஆனால் மாட்டிறைச்சி சாப்பிடவில்லை என தெரிவித்துள்ளனர். சட்டசபை தேர்தல் நேரத்தில் மாநில பாஜக தலைவர் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியிருப்பது அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications