சட்டென வீட்டுக்குள் வந்த மர்ம நபர்.. அலறிய பெண்.. பலாத்கார வழக்கில்.. கோர்ட்டில் நடந்த ட்விஸ்ட்!
மும்பை: பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள் தீர்ப்பு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கிலிருந்து குற்றம்சாட்டப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மும்பையின் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கணவனை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் கத்தியுடன் உள்ளே புகுந்து சமையலறையில் இருந்த தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
"இதேபோல மற்றொரு நாள் அதே மர்ம நபர் மீண்டும் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போதுதான் இந்த நபர் தனது வீட்டருகில் வசிக்கும் நபர் என்று அடையாளம் தெரிந்தது. அவர் கத்தியை வைத்திருந்ததில் நான் இது குறித்து யாரிடமும் எதையும் சொல்லவில்லை. இதனையடுத்து இது போன்று அடிக்கடி இந்த நபரால் நான் வன்கொடுமையை அனுபவித்து வந்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் இவர் பணம் கேட்டு தொல்லை செய்திருக்கிறார்.

வழக்குப்பதிவு
ஆனால் என்னிடம் பணம் இல்லாத நிலையில், என்னுடைய தங்க நகைகளை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ளதாக அதை அடைமானம் வைத்து பணத்தை பெற்றுக்கொண்டார். இதுவரை நகையும் திரும்ப கிடைக்கவில்லை. அந்த நபரின் தொல்லையும் முடிவுக்கு வரவில்லை" என்று புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில் அந்த நபர் மீது காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டத்தின் 376, 406, 427, 323, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். வழக்குப்பதிவு செய்ததை தெரிந்துகொண்ட அந்த நபர் தலைமறைவாகியுள்ளார். பின்னர் காவல்துறையினர் ஓரிரு நாட்களில் அவரை கைது செய்திருக்கின்றனர். ஆனால் கைதான நபர் தான் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

வழக்கு
நீதிபதி விபா கன்கன்வாடி மற்றும் அவுரங்காபாத் பெஞ்சின் நீதிபதி அபய் வாக்வாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பை வாசித்தபோது நீதிபதிகள் கூறிய கருத்து தற்போதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் முன்வைக்கப்பட்ட குற்றத்தை குற்றம் சாட்டப்பட்ட தரப்பின் வழக்கறிஞர் ராஜேந்திர தேஷ்முக் கடுமையாக மறுத்திருக்கிறார். இவர்கள் இருவரும் சமீப காலங்களாக இருவரின் ஒன்றுபட்ட கருத்துடன்தான் பாலுறவில் ஈடுபட்டு வந்ததாக தேஷ்முக் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னரே பழக்கம்
மட்டுமல்லாது இவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்திருக்கிறது எனவும் அப்பெண் மக்கள் நெரிசல் அதிகம் இருக்கும் பகுதியில் வசிக்கும் நிலையில் காவல்துறையினர் கூறுவதை போல திடீரென கத்தியுடன் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த குற்றம் எந்த தேதியில் நடந்தது என்பது குறித்து சரியான வாதங்கள் வைக்கப்படாததால் குற்றச்சாட்டுகள் தெளிவற்றவையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். எனவே இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் இதனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரினார்.

விடுதலை
எதிர் தரப்பில் இளம்பெண்ணுக்காக ஆஜரான வழக்கறிஞர் கலானி, இவர்களுக்கு இடையில் நிறைய முறை பாலுறவு இருந்திருக்கிறது. ஆனால் ஒரு முறைகூட இளம்பெண்ணின் சம்மதம் கேட்கப்படவில்லை. இளம்பெண் தனது குழந்தைகளின் உயிருக்கு பயந்து இவையத்தனையையும் சகித்துக்கொண்டு இருந்திருக்கிறார். இருவருக்கும் இடையிலான பாலுறவு ஒவ்வொருமுறையும் பலாத்காரமாகவே இருந்திருக்கிறது என்று கூறியிருந்தார். இருதரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், "மக்கள் நெரிசல் அதிகம் இருக்கும் பகுதியில் குழந்தைகளுடன் இருக்கும் இளம்பெண் ஒருவர் மிரட்டி பல முறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இந்த வழக்கிலிருந்து குற்றம்சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்கிறோம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications