'மிரட்டினால் கை, கால்களை உடைங்க'.. நான் பெயில்ல எடுக்கிறேன்... மகாராஷ்டிர எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஏக்னாத் ஷிண்டே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ. பிரகாஷ் சுர்வே, தங்களை யாரும் மிரட்டினால் கை, கால்களை அடித்து உடைங்க.. நான் உங்கள பெயில்ல எடுக்கிறேன் என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சி நடந்து வந்த நிலையில், அதே கட்சியின் மூத்த தலைவரான ஏக்னாத் ஷிண்டேவின் திடீர் முடிவால் அந்த ஆட்சி பாதியிலேயே கவிழ்ந்தது.
மேலும் கட்சியும் இரண்டாக பிரிந்தது. சிவசேனா தலைவராக உத்தவ் தாக்கரே இருந்து வரும்நிலையில், பாஜனதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்ட சிவசேனாவின் ஏக்னாத் ஷிண்டே தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
உத்தவ் தாக்ரேதான் தலைவர் .. திடீர் குண்டு போட்ட ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ.. மகா அரசியலில் சலசலப்பு
இரு அணியாக சிவசேனா
தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட ஏக்னாத் ஷிண்டே, தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறி வருகிறார். இதேபோல தங்கள் கட்சிக்காக புதிய அலுவலகம் கட்டவும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உத்தவ் தாக்கரேக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரு தரப்பினரும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருவதால் இந்த பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை.
மிரட்டினால் கை, கால்களை உடைத்து விடுங்கள்
இவ்வாறாக சிவசேனாவின் இரு தரப்பினரும் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டு வருவது மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் அனலை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், யாராவது உங்களை மிரட்டினால், அவர்கள் கை, கால்களை உடைத்து விடுங்கள், உங்களை ஜாமினில் வெளியே எடுக்க நான் இருக்கிறேன் என்று ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ பிரகாஷ் சுர்வே பேசியிருப்பது சர்ச்சையை கிளைப்பியுள்ளது.
அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை
மகாராஷ்டிராவின் மகாதனே தொகுதி எம்.எல்.ஏவான பிரகாஷ் சுர்வே ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவியுள்ளார். அண்மையில், மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் இவருக்கும் இடம் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், பிரகாஷ் சுர்வேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இந்த சூழலில், தனது தொகுதியில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட்டு பிரகாஷ் சுர்வே பேசினார்.
அவர்களை அடியுங்கள்...
அப்போது தீடிரென ஆவேசமாக பேசிய பிரகாஷ் சுர்வே, யாருடைய மிரட்டலையும் சகித்துக்கொள்ள முடியாது. யாராவது உங்களிடம் ஏதாவது பேசினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுங்கள். அவர்களை அடியுங்கள்....நான் இருக்கிறேன்... பார்த்துக்கொள்ளலாம். அவர்கள் கையை உடைக்க முடியவில்லையா, கால்களை உடையுங்கள். மறுநாளே உங்களை நான் ஜாமினில் எடுத்து வெளியே விடுகிறேன். எந்த கவலையும் வேண்டாம். யாருடனும் நாங்கள் சண்டைக்கு போகமாட்டோம். ஆனால், யாராவது எங்களிடம் சண்டைக்கு வந்தால் அவர்களை சும்மா விட்டு விட மாட்டோம்" என்றார்.
உத்தவ் அணி போலீசில் புகார்
எம்.எல்.ஏ பிரகாஷ் சுர்வேயின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், உத்தவ் தாக்கரே அணியினர் அங்குள்ள தாஹிசார் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளங்களின் எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு டிரெண்டாகி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு ஏக்நாத் ஷிண்டேவும் பிறகு விளக்கம் அளிக்கலாம் என மராட்டிய அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.