ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஆணவக் கொலைகள்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை
மும்பை: நாட்டில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: 1991-ல் உத்தரப்பிரதேசத்தில் 15 வயது தலித் சிறுமி, ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். சட்டம் என்பது வெளிப்புற நிகழ்வுகளை மட்டுமே கட்டுப்படுத்தக் கூடியது அல்ல. மக்களின் உள்வாழ்க்கையையும் ஒழுங்குபடுத்தக் கூடியது சட்டம்.
நமது நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில், அடிப்படை உரிமைகளைத் தாங்கக் கூடியவர் ஒரு தனிநபர்தான். சமூக மேலாதிக்கம் போன்றவைகளாள் சட்ட கட்டமைப்புகளை, அரசியல் சாசன அமைப்பை நீர்த்துப் போகச் செய்துவிட முடியாது. அரசியல் சாசனம் என்பது நடைமுறைக்கு வந்த பின்னரும் கூட சமூக மேலாதிக்க சக்திகள் பல்வேறு கட்டுப்பாடுகளை திணிக்கின்றன.

பொதுவாக சட்டங்கள் என்பவை பெரும்பான்மை வாக்குகள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினர் வாக்குகளை மையமாகக் கொண்டது. ஆனால் பெரும்பான்மை என்பது மேலாதிக்க குழுக்கள் வசம் உள்ளது. அவர்களது சிந்தனையும் எண்ண ஓட்டமுமே திணிப்பாகவும் அமைகிறது.
இதனால் ஜாதி மறுப்பு திருமணங்கள் என்பவை பெரும் குற்றமாகப் பார்க்கிற போக்கு உள்ளது. இதனால் ஜாதிய ஆணவப் படுகொலைகள் நிகழ்கின்றன. நமது நாட்டில் ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்ட ஜாதி ஆணவக் கொலைகள் நடக்கின்றன. ஆனால் இந்த கொலைகளை பெரும்பான்மை சக்திகள் மேற்கொள்கின்றன. ஆகையால் சட்டத்தின் முன்னே இந்த கொலைகள் வந்துவிடாமல் பாதுகாக்கப்படுகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட ஆடைகளை மேலாதிக்க சமூகம் கருவியாக கையாள்கிறது. தனிமனிதர்களின் அடையாளத்தை மேலாதிக்க குழுக்கள் ஒடுக்குகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் கலாசாரம் என்பது மேலாதிக்க சக்திகளால் மட்டுமல்ல, அரசாங்கத்தின் அமைப்புகளாலும் கூட சில நேரங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன.
நமது அரசியல் சாசனத்தின் 377-வது பிரிவு ஒருபால் உறவை கிரிமினல் குற்றம் என குற்றம்சாட்டியது. அதை இப்போது உச்சநீதிமன்றம் திருத்தி உள்ளது. ஒரு பால் உறவு என்பது கிரிமினல் குற்றமே அல்ல என திருத்தப்பட்டுள்ளது. இத்தகைய முற்போக்கு அம்சங்களும் சித்தாங்களுமே நம்மை வழிநடத்திச் செல்லக் கூடியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications