இன்று நாராயண் ரானே... அன்று முரசொலி மாறன், டி.ஆர். பாலு கைது.. என்னதான் நடந்தது?
மும்பை: மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்ட விவகாரத்துடன் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் கைது செய்யப்பட்டதை ஒப்பிட்டு விவாதித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை கன்னத்தில் அறைவேன் என பேசினார் மத்திய அமைச்சர் நாராயண் ரானே. இதனால் அவரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர். அதேநேரத்தில் இரவோடு இரவாக அவருக்கு ஜாமீனும் கிடைத்தது.

நாராயண் ரானே சாப்பிட்டுக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் பாஜக- சிவசேனா தொண்டர்களிடையே பெரும் மோதல் வெடித்தது. மத்திய அமைச்சராக இருக்க்கும் போது ஒருவரை கைது செய்ய முடியுமா? என்கிற கேள்வி இப்போது மட்டுமல்ல.. 20 ஆண்டுகளுக்கு முன்னரே எழுந்த ஒன்றுதான்.
அதுவும் தமிழ்நாட்டில்.. 2001-ம் ஆண்டு மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக கூறி ஜெயலலிதா அரசால் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அந்த கைது நடவடிக்கையை தடுக்க முயன்றவர்கள் அப்போது மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன், டி.ஆர். பாலு. போலீசாரின் தாக்குதலில் நிலைகுலைந்த முரசொலிமாறன் கீழே விழுந்து பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வைத்து அவருக்கு கைது வாரண்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் சிறையில் அடைக்கப்படவில்லை.
அதே நாளில் முரசொலி மாறன் வீட்டில் போலீசார் நுழைந்ததை தடுத்ததாக மற்றொரு மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர். பாலுவும் கைது செய்யப்பட்டார். ஆனால் இருவருமே விடுவிக்கப்பட்டார். பின்னர் இருவர் மீதான வழக்குகளுமே வாபஸ் பெறப்பட்டன. அப்போது மத்திய அமைச்சர்களை மாநில அரசுகள் நினைத்த நேரத்தில் கைது செய்வதைத் தடுக்க வேண்டும் என்கிற குரல்களும் எதிரொலித்தன.
பொதுவாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும் போது எம்.பி.க்களை சிவில் வழக்குகளில் கைது செய்ய முடியாது. சென்னை உயர்நீதிமன்றமும் ஒரு வழக்கில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக தம்மை கைது செய்ய கூடாது என கோர முடியாது என தீர்ப்பளித்திருந்தது. தற்போது நாராயண் ரானே கைது செய்யப்பட்ட விவகாரம் மேலே தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவங்களை அப்படியே பிரதிபலிக்கின்றன.












Click it and Unblock the Notifications