நாட்டின் ஏற்றுமதி 34.57% சரிவை சந்தித்துள்ளது - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்
மும்பை: நமது நாட்டின் ஏற்றுமதியானது 34.57% சரிவை சந்தித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டிருக்கும் லாக்டவுன் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியமாகத்தான் இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டு வருகிறது,.
அதேநேரத்தில் மக்களின் தேவைகளை அரசுகள் நிறைவு செய்யாமல் போனால் நாடுகளில் நிலையற்ற தன்மை உருவாகவும் வாய்ப்பிருகிறது என உலக வங்கி எச்சரித்திருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே 21 நாட்கள் லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டதால் மிகப் பெரும் நெருக்கடியை அனைத்து துறைகளும் சந்தித்துள்ளன.
இதனால் கடந்த முறை செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகள் அனைத்து வகையான கடன்களை வசூலிக்க தடை விதிக்கப்படுவதாக கூறியிருந்தார். ஆனால் இதில் பல்வேறு குழப்பங்கள் இப்போதும் தொடருகின்றன.
இந்திய பொருளாதாரம் 7.4 சதவீதம் வளர்ச்சியடையும்.. சொல்கிறார் சக்தி காந்த தாஸ்
அதேபோல் ரெப்போ வட்டி விகிதம், குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ஆகியவையும் குறைக்கப்படுவதாகவும் சக்தி காந்ததாஸ் கூறியிருந்தார். இந்த நிலையில்தான் தற்போது லாக்டவுன் மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரத்தில் ஏப்ரல் 20-ந் தேதிக்குப் பின்னர் லாக்டவுனில் தளர்வுகள் இருக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு 2-வது முறையாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, நமது நாட்டின் ஏற்றுமதியானது 34.57% சரிவை சந்தித்துள்ளது என குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் ஜி20 நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகவே உள்ளது என்றார் சக்திகாந்ததாஸ்
மேலும் 91% ஏடிஎம்கள் முழுமையாக இயங்கி வருகின்றன; பொதுவாக தொழில்துறை உற்பத்தி 4 மாதங்களில் பெருமளவு குறைந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் சக்திகாந்த தாஸ். நமது நாட்டில் தற்போது 476.5 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் கூறினார்.
அதேபோல் வங்கிகளிடம் இருந்து ரூ50,000 கோடிக்கு கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டு நபர்டு, சிட்பி உள்ளிட்ட வங்கிகளின் மூலமாக ரூ. 50,000 கோடிக்கு கடன் உதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.