72 வயது முதியவரை குதறி தள்ளிய ராட்வைலர் நாய்! ஓனருக்கு 3 மாதம் சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி
ராட்வைலர் வகை நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. இது ஒருமுறை இலக்கை கடித்துவிட்டால் அதனை விடாமல் பிடித்துக்கொண்டே இருக்கும்.
மும்பை: கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் 72 வயது முதியவரை 'ராட்வைலர்' நாய் தாக்கிய சம்பவத்தில் நாயின் உரிமையாளருக்கு மூன்று மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாய் ஆக்ரோஷமானது என்று தெரிந்திருந்த பின்னரும் அதனை கவனமாக வைத்திருக்காமல் அசால்டாக இருந்தது உரிமையாளரின் தவறு என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் தொழிலதிபர் சைரஸ் பெர்சி ஹோர்முஸ்ஜி(44). இவரது வீட்டின் அருகில் 72 வயது மதிக்கத்தக்க உறவினர் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். இவருக்கும், சைரஸ் பெர்சி ஹோர்முஸ்ஜிக்கும் சொத்து விஷயத்தில் பிரச்னை எழுந்திருக்கிறது. எனவே அடிக்கடி வீதியில் இறங்கி இவர்கள் சண்டையிட்டுக்கொள்வார்கள். இது வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி நடைபெற்ற சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அன்று வழக்கம் போல இருவரும் சண்டையிட்டுக்கொண்டிருக்கையில் தொழிலதிபர் சைரஸ் பெர்சி ஹோர்முஸ்ஜியின் காரிலிருந்த ஜெர்மன் ஷெபர்டு மற்றும் ராட்வைலர் நாய்கள் குரைத்த வண்ணம் இருந்துள்ளன. இதனை கண்ட சைரஸ் பெர்சி ஹோர்முஸ்ஜி, தனது காரின் கதவை திறந்துவிட்டுள்ளார். இதில் ராட்வைலர் நாய் நேராக தனது ஓனரிடம் சண்டையிட்ட 72 வயது முதியவரை நோக்கி பாய்ந்திருக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்திற்கெல்லாம் அவரை கடித்து குதறியிருக்கிறது.

குற்றம்
இந்த தாக்குதலில் மூன்று இடங்களில் முதியவருக்கு ஆழமான காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்திருக்கிறது. இதனையடுத்து முதியவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய முதியவர் இந்த சம்பவத்தை எதிர்த்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கு சுமார் 13 ஆண்டுகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில், "ராட்வைலர் நாய்கள் மோசமானது என்று தெரிந்த பின்னரும் அதனை பாதுகாப்பாக வைத்திருக்காமல் இருந்தது அதன் உரிமையாளரின் அலட்சியத்தை காட்டியுள்ளது.

சிறை
குறிப்பாக வயது முதிர்ந்த நபர்கள் இருக்கும் இடத்தில் இது போன்ற ஆபத்தான விலங்குகளை கவனமுடன் கையாள உரிமையாளர் தவறியிருக்கிறார். எனவே சைரஸ் பெர்சி ஹோர்முஸ்ஜிக்கு மூன்று மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது" என்ற கூறியுள்ளது. இந்த தீர்ப்பு மும்பையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு சம்பவம் அரங்கேறியது. உள்ளூரில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டில் 'பிட்புல்' வகை நாயை வளர்த்து வந்திருக்கிறார்.

பிட்புல்
இந்நிலையில் திடீரென ஒருநாள் அதிகாலையில் இவரது தாயை இந்த நாய் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 82 வயது தாய் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பொதுவாக நாய்கள் மனிதர்களை தாக்குவது சாதாரணமானதாக இருந்தாலும், உயிரிழக்கும் வரை கொடூரமாக தாக்குவது அரிதானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் நாட்டு நாய் இனங்கள் எவ்வளவோ இருப்பினும் பலரும் வெளிநாட்டு இனங்களையே அதிகம் விரும்புகின்றனர். இதில் 'ராட்வைலர்' வகை நாய் பெரும்பாலானோரால் விரும்பி வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வகை நாய்கள் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவையாகும்.

தாக்குதல்
முதலில் கால்நடைகளை மேய்க்க மேய்ப்பாளருக்கு உதவியாக இது வளர்க்கப்பட்டது. பின்னர்தான் வீடுகளில் வளர்க்க தொடங்கினர். இதன் மூர்க்க குணத்தால் நன்கு அறியப்பட்ட இந்த வகை நாய்கள், உரிமையாளர் கட்டளைக்கு மட்டுமே அடிபணியும் பண்பு கொண்டது. இதன் தாக்குதல் அம்சமும் வித்தியாசமானதாக இருக்கும். ஒருமுறை இலக்கை கடித்துவிட்டால் மீண்டும் வாயை திறக்கவே செய்யாது. எனவே தாக்குதலுக்கு உட்பட்டவரை இந்த நாயிடமிருந்து மீட்டெடுப்பது சிரமமான பணியாகும். இந்த தாக்குதலில் எலும்பு முறிவு கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications