அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் மகா. மாஜி அமைச்சர் அனில்தேஷ்முக் எஸ்கேப்- அவகாசம் கேட்கிறார்!
மும்பை: பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனில் தேஷ்முக் இன்று ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை விசாரணைக்கு வேறு ஒருநாளில் ஆஜராக அவகாசம் கோரியிருக்கிறார் அனில்தேஷ்முக்.
மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சராக அனில் தேஷ்முக் பதவி வகித்தார். அப்போது மாதம் ரூ100 கோடி லஞ்சம் வசூலித்து தர வேண்டும் என்று தம்மை வலியுறுத்தியதாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம்சாட்டி இருந்தார்.

பரம்பீர்சிங் விவகாரம்- அனில்தேஷ்முக் ராஜினாமா
பரம்பீர் சிங்கின் இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பரம்பீர் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் சர்ச்சை ஓயாத நிலையில் உள்துறை அமைச்சர் பதவியை அனில்தேஷ்முக் ராஜினாமா செய்தார்.

அமலாக்கத்துறை ரெய்டு
இது தொடர்பாக அனில் தேஷ்முக் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதனிடையே பண மோசடி, அன்னிய செலாவணி மோசடி உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அனில் தேஷ்முக்கின் வீடுகளில் அமலாக்கப் பிரிவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

2 உதவியாளர்கள் கைது
அத்துடன் அனில் தேஷ்முக்கின் 2 உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக அனில் தேஷ்முக் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணைக்குப் பின் கைது?
இந்த விசாரணையின் முடிவில் அனில்தேஷ்முக் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே அமலாக்கத்துறையின் விசாரணையில் சிவசேனா கட்சியின் தலைவர்கள் சிக்கி இருக்கின்றனர். இதனால் எப்படியாவது பாஜகவுடன் கூட்டணி வைத்து எங்களை காப்பாற்றுங்கள் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அவர்கள் கடிதம் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்கேப்- அவகாசம்
ஆனால் இன்றைய விசாரணைக்கு அனில்தேஷ்முக் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறையின் விசாரணைக்கு வேறு ஒருநாளில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று அவகாசம் கேட்டிருக்கிறார் அனில்தேஷ்முக்.












Click it and Unblock the Notifications