மிகப் பெரிய மனதுடன் எனக்கு முதல்வர் பதவியை தாரை வார்த்து கொடுத்தது பாஜக.. நெகிழ்ந்த ஏக்நாத் ஷிண்டே
மும்பை: மிகப் பெரிய மனதுடன் தமக்கு முதல்வர் பதவியை பாஜக தாரைவார்த்து கொடுத்ததாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.
சபாநாயகர் தேர்தலில் போட்டியிட்ட பாஜகவின் ராகுல் நர்வேகர் 164 வாக்குகளையும் சிவசேனா சார்பில் போட்டியிட்ட ராஜன் சால்விக்கு 107 வாக்குகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து சட்டசபையில் புதிய சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: உண்மையான சிவசேனா- பாஜக ஆட்சியை அமைத்துள்ளோம். பால்தாக்கரேவின் கனவுகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். பால் தாக்கரேவின் மிக சாதாரண தொண்டனால் இதனை சாதிக்க முடிந்துள்ளது என்பது பெருமைக்குரியது.
ஆனால் ஒருதரப்பு சொன்னது (உத்தவ் தாக்கரே தரப்பு).. 5 எம்.எல்.ஏக்களுடன் தொடர்பில் இருக்கிறோம் என தொடங்கி.. 25 எம்.எல்.ஏக்கள் திரும்பி வருவார்கள் என்றனர்.. ஆனால் பாஜகவுக்கு 115 எம்.எல்.ஏக்கள்; எங்களுக்கு 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை இன்று நிரூபித்துவிட்டோம்.
பாஜகவினர் மிகப் பெரிய மனதுடன் எனக்கு முதல்வர் பதவியை வழங்கி உள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு மிக்க நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே கூறினார். இன்றைய சபாநாயகர் தேர்தல் வாக்குப் பதிவின் போது சமாஜ்வாதி, மஜ்லிஸ்ட் கட்சியினர் வாக்களிக்கவில்லை.
மகாராஷ்டிரா சபாநாயகராக பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்வு-முதல் அக்னி பரீட்சையில் தேறிய ஏக்நாத் ஷிண்டே!