"நீங்க பதில் சொல்லியே தீர வேண்டும்.." மகாராஷ்டிரா பாஜக முதல்வரை ஆவேசமாக சாடிய ஷிண்டே? கூட்டணி காலி?
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், அங்குத் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ஷிண்டே இடையே மோதல் வெடித்துள்ளது. இரு தரப்பும் தொடர்ச்சியாக மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். இதனால் கூட்டணியில் மிகப் பெரிய ஒரு விரிசல் ஏற்படும் ஒரு சூழலே ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மறுநாள், டிசம்பர் 2ம் தேதி முதலாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு தலைவர்களும் நேரடியாகப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளதால் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

மகாராஷ்டிரா அரசியல்
முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உள்ளிட்டோரும் கூட பல்வேறு இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மகாராஷ்டிராவில் ஆளும் என்டிஏ கூட்டணி அரசில் தான் பாஜகவும் சிவசேனாவும் இருக்கிறது. இருப்பினும், இந்த உள்ளாட்சி தேர்தலில் பல தொகுதிகளில் அவர்கள் தனித்தே போட்டியிடுகிறார்கள்.
இதன் காரணமாக இரு தரப்பும் மாறி மாறி காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். பாஜக, சிவசேனா மாநில அளவில் கூட்டணியில் இருந்தே கொண்டே இப்படி விமர்சிப்பது பேசுபொருளாகியே வருகிறது. இதற்கிடையே அங்குள்ள சத்தாராவின் பல்டனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது கட்சித் தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுவது குறித்து போலீசாரை நேரடி எச்சரித்தார்.
மாறி மாறி விமர்சனம்
காவல்துறை உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும். உள்துறையை முதல்வர் அமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தன்வசம் வைத்திருக்கும் நிலையில், அவரை மறைமுகமாகத் தாக்கிப் பேசும் வகையிலேயே ஷிண்டே பேசியிருந்தார். பட்னாவிஸ் மற்றும் ஷிண்டே இரு தலைவர்களுமே கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக இப்படி மாறி மாறி விமர்சித்துப் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
ஷிண்டே ஆவேசம்
தாக்கரேவுக்கு எதிராகக் கலகம் செய்து சிவசேனா கட்சியை உடைத்து வந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய ஷிண்டே, "நான் பொதுவாகவே அமைதியான சுபாவம் கொண்டவன். ஆனால் நேரம் வரும்போது, தப்பு செய்வோரைத் திருத்துவேன்.. இதை ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் 2022ல் பார்த்தது. எங்கள் கட்சித் தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதை போலீசார் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேல் இதுபோன்ற புகார்கள் வந்தால் தேவையான நடவடிக்கை எடுப்பேன். சட்டவிரோத அழுத்தங்களுக்கு எல்லாம் அதிகாரிகள் பணிய தேவையில்லை..
எனது கட்சி தொண்டருக்கு நிகழும் எந்தவொரு அநீதியும் எனக்கு நேர்ந்ததாகவே கருதப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லியே தீர வேண்டும்" என விமர்சித்துள்ளார். பட்னாவிஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசார், தனது கட்சியினருக்கு எதிராகப் பொய்யான வழக்குகளைப் பதிவு செய்வதாகவும் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.
மகாராஷ்டிரா அரசியல்
மகாராஷ்டிராவில் டிசம்பர் 2ஆம் தேதி 246 நகராட்சி மன்றங்கள் மற்றும் 42 நகர பஞ்சாயத்துகள் என மொத்தம் 288 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதன் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியிடப்படும். கொங்கன் (27), நாசிக் (49), புனே (60), சத்ரபதி சம்பாஜிநகர் (52), அமராவதி (45), மற்றும் நாக்பூர் (55) ஆகிய மாவட்டங்களுக்குத் தேர்தல் நடக்கிறது. மீதமுள்ள 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க 1.07 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 53.79 லட்சம் பேர் ஆண்கள் மற்றும் 53.23 லட்சம் பெண்கள் ஆவர்.












Click it and Unblock the Notifications