நானும் அபராதம் கட்டியிருக்கேன்.. சாலை விபத்துகளுக்கு 2 முக்கிய காரணங்கள்.. கட்காரி அதிர்ச்சி தகவல்
Recommended Video
மும்பை: போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது குறித்து மக்கள் அதிக அளவு வேதனைப்பட்டு வரும் நிலையில், நான் கூட வேகமாக வந்ததற்காக அபராதம் கட்டியுள்ளேன் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 100 நாட்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,
"370 வது பிரிவை ரத்து செய்தது மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது ஆகியவை அரசாங்கத்தின் "மிக முக்கியமான சாதனை" என்றார். மேலும் முத்தலாக் தடை சட்டம் மற்றும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் ஆகியவை மத்திய அரசின் சில பெரிய சாதனைகள்" என்று அவர் கூறினார்.

கடுமையான அபராதம்
போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதையும், சாலைகளில் ஒழுக்கத்தைக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டு மோட்டார் வாகன சட்ட திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்திற்கு கடந்த மாதம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்

வேகமாக சென்றதால் அபராதம்
இந்நிலையில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தால் நாடு முழுவதும் மக்கள் கடும் அபராதம் விதிக்கப்படுவதாக புலம்பி வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் நிதின் கட்கரி, கூறுகையில், மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது மத்திய அரசுக்கு மிகப்பெரிய சாதனை தான். அதிக அபராதம் வெளிப்படைத்தன்மைக்குதான் வழிவகுக்கும், இது ஊழலுக்கு வழிவகுக்காது. . "நான் கூட மும்பையின் பந்தா- ஓர்லியை இணைக்கும் கடல் பாலத்தில் வேகமாக வந்ததற்காக அபராதம் செலுத்தியுள்ளேன்.

விபத்துக்கு காரணம்
இந்தியாவில் அதிக விபத்துக்கள் ஏற்பட சாலை பொறியியல் மற்றும் வாகன பொறியியல் ஒரு முக்கிய காரணங்கள் ஆகும்.

முஸ்லீம் பெண்களுக்கு நீதி
அரசாங்கத்தின் பிற முக்கிய முடிவுகள் "எங்கள் முதல் சாதனை என்று பார்த்தால் முத்தலாக் மசோதாவை நிறைவேற்றியது தான். இதன் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு நீதியை உறுதி செய்துள்ளோம். இது ஒரு வரலாற்று தருணம்.

காஷ்மீரில் வறுமை
இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் 100 நாட்களில் மோடி அரசாங்கத்தின் மிக முக்கியமான இன்னொரு சாதனை என்றால் , ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்தது மற்றும் மாநிலத்தைப் பிரித்ததை கூறலாம்."ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவின் காரணமாக பசியும் வறுமையும் இருந்தது. பாகிஸ்தான் அங்கு ஒரு மறைமுக போரை நடத்தி வருகிறது, தீவிரவாதிகள் அங்கு தீவிரவாதத்தை பரப்புகிறார்கள். கல் வீசி தாக்குதல் நடத்துபவர்களுக்கு அவர்கள் நிதி உதவி செய்கிறார்கள். ஜம்மு-காஷ்மீரில் ரூ .60,000 கோடி பணிகளை நான் பணியாற்றும் சாலை போக்குவரத்து துறை செயல்படுத்தி வருகிறது, அவற்றில் பெரும்பாலானவை சுரங்கங்கள் மற்றும் சாலைகள் கட்டுமான பணிகள் ஆகும்.

400 ரயில்நிலையங்களில்
தற்போது இரண்டு ரயில்நிலையங்களில் களிமண் கப் தேநீர் கிடைக்கிறது. ஆனால் விரைவில் நாட்டில் உள்ள 400 ரயில் நிலையங்களில் களிமண் கப் தேநீர் கிடைக்கும் என்று ரயில்வே அமைச்சர் உறுதியளித்துள்ளார்" இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.












Click it and Unblock the Notifications