சிஎஸ்கே "டொக்கு பிளேயர்" கேதர் ஜாதவ் நினைவு இருக்கா.. பாஜகவில் ஐக்கியம்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் விளையாடியவருமான கேதர் ஜாதவ் இன்று பாஜகவில் சேர்ந்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கேதார் ஜாதவ் அரசியலில் கால்பதிக்க முடிவு செய்து பாஜகவில் சேர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ். மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் ஒருநாள் போட்டி, ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாடினார். அதன்பிறகு அவர் கடந்த ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

கேதர் ஜாதவ் இவர் விரைவில் அரசியலில் நுழையலாம் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக பாஜகவில் கேதார் ஜாதவ் இணையலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தான் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடந்த விழாவில் கேதர் ஜாதவ் பாஜகவில் இணைந்தார். மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் அவர் பாஜகவில் ஐக்கியமானார். பாஜகவின் துண்டு கேதர் ஜாதவிற்கு அணிவிக்கப்பட்டது.
பாஜகவில் சேர்ந்த கேதர் ஜாதவ் மகாராஷ்டிராவை சேர்ந்தவர். இவர் 1985 மார்ச் 26ம் தேதி புனேவில் பிறந்தார். தற்போது அவருக்கு 40 வயது ஆகிறது. கேதர் ஜாதவ் மகாராஷ்டிரா அணியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். ரஞ்சி டிராபியில் பங்கேற்றார். 2013-2014 ரஞ்சி சீசனில் 1,223 ரன்களை குவித்தார். மொத்தம் 6 சதங்களை விளாசினார். இதையடுத்து அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தியாவுக்காக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்னாக விளையாடினார். மேலும் பார்ட்-டைம் ஸ்பின் பவுலராகவும் சில போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்திய அணிக்காக 2014ம் ஆண்டில் அவர் அறிமுகம் ஆனார். முதல் ஒருநாள் போட்டியை இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார். இந்தியாவுக்காக மொத்தம் 73 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கேதர் ஜதாவ் 1,389 ரன்களை குவித்தர். 42.09 என்பது அவரது சராசரியாகும். 27 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். எகனாமி 5.15 ஆக வைத்திருந்தார்.
இவர் கடந்த 2017 ம் ஆண்டில் புனேவில் நடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 76 பந்துகளில் 120 ரன்கள் குவித்து அசத்தினார். இது அவரது கிரிக்கெட் கேரியரில் சிறந்த போட்டியாக அமைந்தது. ஏனென்றால் அந்த போட்டியில் 12 ஓவரில் இந்தியா 63 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும். அப்போது கேப்டன் விராட் கோலியுடன், கேதர் ஜாதவ் இணைவார். இந்த ஜோடி 200க்கும் அதிக ரன்களை குவிக்கும். இறுதியில் இந்தியா 351 ரன்னை சேஸ் செய்து அசத்தல் வெற்றி பெற்றிருக்கும்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் கேதர் ஜாதவ் மொத்தம் 4 அணிகளுக்காக விளையாடி உள்ளார். டெல்லி டேர்டேவில்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்காக கேதர் ஜாதவ் விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேதர் ஜாதவ் விளையாடியபோது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார். கேதர் ஜாதவ் அதிரடியாக ரன்கள் குவிக்காததால் பலரும் அவரை விமர்சனம் செய்தனர்.
அதன்பிறகு கடந்த ஆண்டு 2024 ஜூன் மாதம் 3ம் தேதி அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்து கேதர் ஜாதவ் ஓய்வை அறிவித்தார். இதையடுத்து அவர் விரைவில் அரசியலில் அடுத்த இன்னிங்ஸை தொடங்குவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications