சம்பாதிப்பது இங்கே.. ஆதரவு பாகிஸ்தானுக்கா? துருக்கி நிறுவனத்துக்கு விழுந்த அடி.. மும்பையில் அதிரடி
மும்பை: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலின்போது துருக்கி நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை நம் நாடு அழித்தது. அதற்கு துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து. பயங்கரவாதிகளை வளர்த்துவிடும் பாகிஸ்தானுக்கு இப்படி பகிரங்கமாக துருக்கி ஆதரவு தெரிவித்த நிலையில் அந்த நாட்டுக்கு எதிராக நம் மக்கள் கொதித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.
கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு பதிலடியாக கடந்த வாரம் புதன்கிழமை நள்ளிரவில் நம் நாடு ஏவுகணைகளை வீசி பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதையடுத்து இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்தது. கடந்த புதன் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கடும் மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு போரை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நம்மிடம் கெஞ்சியதால் மோதலை முடிக்கு கொண்டு வர ஒப்புக்கொண்டோம். ஆனாலும் கூட பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் அத்துமீறி ட்ரோன் தாக்குதலுக்கு முயன்று வருகிறது. இதற்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் இந்தியாவுடன் மோதல் நடந்து கொண்டு இருந்தபோதே துருக்கி நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. துருக்கி அதிபர் எர்டோகன் நேரடியாக பாகிஸ்தான் பிரதமரை ஷெபாஸ் ஷெரீப்பை தொடர்பு கொண்டு பேசி ஆதரவை வழங்கினார். அதோடு நம் நாடு நடத்திய தாக்கியதில் பயங்கரவாதிகள் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆனால் அப்பாவிகளை கொன்றதாக பொய்யான குற்றச்சாட்டை பாகிஸ்தான் போல் துருக்கியும் முன்வைத்தது.
இதனால் துருக்கி மீது நம் நாட்டு மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர். வழக்கம்போல் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்ததால் துருக்கியை போல் அஜர்பைஜானுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு சுற்றுலாத்துறை நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. அதேபோல் துருக்கி, அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்வதை பொதுமக்கள் தவிர்க்க சமூக வலைதளங்களிலும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் தற்போது மும்பையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது மும்பை விமான நிலையத்தில் கிரண்வுடண் சர்வீசஸ் பணிகளை துருக்கி நாட்டின் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து மேற்கொண்டு வருகிறது. தற்போதைய மோதலில் துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து துருக்கி நிறுவனத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த டிமாண்ட்டை வலியுறுத்தில் மும்பை விமான நிலையத்தில் சிவசேனா கட்சி தலைவர்கள் தீவிரமாக நேற்று போராடினர்.
மகாராஷ்டிராவில் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் சிவசேனா அங்கம் வகிக்கும் நிலையில் இந்த போராட்டம் என்பது அதிக கவனம் பெற்றது. இந்த போராட்டத்தின்போது சிவசேனா கட்சியின் தலைவர் முர்ஜி படேல் கூறுகையில், ‛‛துருக்கி பாகிஸ்தானுக்கு உதவி செய்கிறது. இப்படி இருக்கும்போது அந்த நாட்டின் கம்பெனி எப்படி மும்பையை வைத்து சம்பாதிக்க அனுமதிக்க முடியும்? எந்த துருக்கி நிறுவனத்தையும் இங்கே செயல்பட விடமாட்டோம். இந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய விமான துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம்'' என்றார்.
மேலும் துருக்கியை பொறுத்தமட்டில் நம் நாடு மிகவும் முக்கியமான நாடாக உள்ளது. நம் நாட்டை வைத்து துருக்கி அதிக லாபம் ஈட்டி வருகிறது. நம் நாட்டுக்கும், துருக்கிக்கும் இடையே கடந்த 2023-24ம் ஆண்டில் சரிந்து 10.43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் நடந்தது. இதில் 6.65 பில்லியன் டாலருக்கு துருக்கியில் இருந்து பொருட்களை நாம் இறக்குமதி செய்துள்ளோம். 3.78 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நாம் துருக்கிற்கு ஏற்றுமதி செய்துள்ளோம். அதேபோல் 2000ம் ஆண்டு முதல் 2023 டிசம்பர் மாதம் வரை துருக்கியில் இருந்து நம் நாட்டுக்கு அந்நிய நேரடி முதலீடு என்ற வகையில் 227.5 மில்லியன் டாலர் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது. மறுபுறம் 2000 ஆகஸ்ட் முதல் 2024 மார்ச் மாதம் வரை துருக்கிற்கு நம் நாட்டில் இருந்து அந்நிய நேரடி முதலீடு என்ற வகையில் 200 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது.
அதேபோல் கடந்த 2022ம் ஆண்டை ஒப்பிடும்போது துருக்கிக்கு சுற்றுலா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை என்பது கிடுகிடுவென அதிகரித்தது. கடந்த ஆண்டு மட்டம் 3.3 லட்சம் பேர் நம் நாட்டில் இருந்து துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனால் நம் நாட்டை வைத்து துருக்கி வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறையில் கல்லா கட்டுகிறது.. ஆனால் விசுவாசத்தை மட்டும் பாகிஸ்தானுக்கு காட்டி வருவதால் பல்வேறு தரப்பினர் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications