இந்தியாவின் மிக நீள கடல் மேம்பாலம் இதுதான்! ஆனால் பைக், ஆட்டோ போகமுடியாது! எப்படி இருக்கு பாருங்க
மும்பை: இந்தியாவின் மிக நீளமான கடல் மேம்பாலம் மும்பையில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் தான் அந்த மேம்பாலம் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் மத்திய அரசு உள்கட்டமைப்புகளை மேம்பாலத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக போக்குவரத்து துறையில் பல்வேறு புதிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் மிகவும் நீளமான கடல் மேம்பாலம் மும்பையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மும்பை டிரான்ஸ் ஹார்பர் என அழைக்கப்படும் இந்த மேம்பாலம் செவ்ரியில் இருந்து நவா ஷேவா இடையே அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் நாளை திறக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் தான் இந்தியாவின் மிகவும் நீளமான கடல் மேம்பாலம் குறித்த 5 முக்கிய விஷயம் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
முதல் விஷயம்: இந்தியாவின் மிகவும் நீளமான கடல் மேம்பாலம் செவ்ரி மற்றும் நவா ஷேவா இடையே மொத்தம் 21.8 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 16.50 கிலோமீட்டர் பாலம் கடலுக்கு மேலேயும், 5.50 கிலோமீட்டர் தொலைவிலான பாலம் தரைக்கு மேலேயும் அமைக்கப்பட்டுள்ளது.

2வது விஷயம்: இதற்கு மொத்தம் ரூ.21,200 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் 2 மணிநேர பயணம் என்பது 15 முதல் 20 நிமிடங்களாக குறைய உள்ளது. மேலும் எரிபொருள் செலவு குறைவதோடு, மக்களின் நேரமும் மிச்சமாக உள்ளது. மேலும் இந்த மேம்பாலம் விரைவில் மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட உள்ளது.
3வது விஷயம்: இந்த புதிய மேம்பாலத்துக்கு மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த மேம்பாலம் என்பது அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி-நவ ஷேவா அடல் சேது பாலம் என அழைக்கப்படுகிறது. ரூ. 21,200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது, இதில் ரூ.15,000 கோடி கடன் மூலம் பெறப்பட்டது.
4வது விஷயம்: இது ஆறுவழி மேம்பாலமாகும். இந்த மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, டிராக்கடர்கள் அனுமதிக்கப்படாது. நான்கு சக்க வாகனங்கள், மினிபஸ்கள், கனரக வாகனங்களுக்கு மட்டுமே மேம்பாலத்தில் செல்ல முடியும். இந்த வாகனங்கள் அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். பாலத்தில் ஏறும்போதும், பாலத்தில் இருந்து இறங்கும்போது வாகனத்தின் வேகம் 40 கிலோமீட்டராக மட்டுமே் இருக்க வேண்டும்.
5வது விஷயம்: மேம்பாலத்தில் செல்ல ஒரு வழி கட்டணமாக ரூ.250 நிர்ணயம் செய்ய்பபட்டுள்ளது. இதற்கான முடிவை மகாராஷ்டிரா அரசு எடுத்துள்ளது. இந்த கட்டணம் என்பது முதல் ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும். அதன்பிறகு விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications