மகாராஷ்டிரா; துணை முதல்வர் அஜித்பவாரின் ரூ1,000 கோடி சொத்துகளை பறிமுதல் செய்தது வருமான வரித்துறை!
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பரபரப்பு ஓயவில்லை. அதற்குள் மாநில துணை முதல்வரும் நிதி அமைச்சருமான அஜித் பவாரின் ரூ1,000 கோடி சொத்துகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜகவை கழற்றிவிட்டு சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி அமைத்தது. முதலில் பாஜக-தேசியவாத காங். கூட்டணி ஆட்சி அமைய இருந்தது.
இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து துணை முதல்வராகவும் பதவி ஏற்றவர் அஜித் பவார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இதனை ஏற்கவில்லை. இதனால் பாஜகவின் ஆட்சி அமைக்கும் கனவு தகர்ந்தது. பின்னர் அஜித் பவாரும் சரத்பவாருடன் இணைந்து கொண்டார்.

துணை முதல்வர்
சிவசேனா-காங்கிரஸ்- தேசியவாத காங். கூட்டணி அரசில் துணை முதல்வராக்கப்பட்டார் அஜித் பவார். அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே பல்வேறு ஊழல் முறைகேடு புகார்களில் சிக்கியிருந்தார் அஜித்பவார். இந்த நிலையில் கடந்த மாதம் அஜித் பவாருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

முதலில் அமலாக்கப் பிரிவு
அஜித் பவாருக்கு சொந்தமான சத்தாரா கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது என்ற புகார் முதலில் எழுந்தது. இதையடுத்து சர்க்கரை ஆலை உள்ளிட்ட இடங்களை முதலில் அமலாக்கத்துறை முடக்கியது. இதையடுத்து சர்க்கரை ஆலை மற்றும் அஜித் பவாரின் பினாமி நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டின் கீழ் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

ஐடி ரெய்டில் சிக்கியது
இந்த சோதனைகளின் போது சட்டவிரோதமான ரூ1,000 கோடி சொத்துகள் கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று அஜித்பவாருக்கு சொந்தமான ரூ1,000 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருக்கிறது.

ரூ1,000 கோடி சொத்துகள் பறிமுதல்
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் 12 மணிநேர விசாரணைக்குப் பின்னர் இன்று அதிகாலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு ஓய்வதற்குள் தற்போது துணை முதல்வரான நிதி அமைச்சர் அஜித்பவாரின் ரூ1,000 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications