இப்படி எல்லாம் சாவு வருமா.. ஷூ லேசை கட்டும் போது தலையில் பாய்ந்த ஜாவ்லின்! 15 வயது சிறுவன் பலி
மும்பை: மகாராஷ்டிராவில் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது மாணவனுக்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் மிக மோசமான மரணம் வந்து சேர்ந்துள்ளது. இது குறித்த தகவல்கள் அதிர்ச்சி தருவதாகவே அமைந்துள்ளது.
ஒருவருக்கு எப்போது சாவு வரும்.. அது எப்படி வரும் என்பதை யாராலுமே சொல்ல முடியாது. மிகப் பெரிய ஆபத்தில் இருந்து நொடிகளில் தப்பியவர்களும் உள்ளனர். இதெல்லாம் ஒரே மேட்டரா என்று கேட்கும் சின்ன விஷயத்தில் சிக்கிய உயிரிழந்தோரும் உள்ளனர்.

அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. அங்கே ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வெறும் 15 வயதே ஆன மாணவர் பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்.
பரிதாபமாக பலி: மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குப் பள்ளியில் ஈட்டி எறிதல் பயிற்சி நடந்து வந்துள்ளது. அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த 15 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார். அங்கு மங்கோன் அடுத்துள்ள புரார் என்ற இடத்தில் ஐஎன்டி பள்ளி அமைந்துள்ளது. அங்கே பயிற்சி அமர்வில் ஒரு மற்றொரு மாணவர் வீசிய ஈட்டி தாக்கியதில் இந்த மாணவர் உயிரிழந்தார். இதில் உயிரிழந்தவர் 15 வயதான ஹுஜெஃபா தாவேரே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பயிற்சி அமர்வின் போது ஹுஜெஃபா தாவேரே தனது ஷூலேஸை கட்ட கீழே குனிந்துள்ளார்.. இதனால் மற்றொரு மாணவர் வீசிய அந்த ஈட்டி தன்னை நோக்கி வருவதை அவர் கவனிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பள்ளியின் முக்கிய ஈட்டி எறிதல் வீரராக இருந்த தாவரே, விரைவில் அங்கு நடக்க இருக்கும் உள்ளூர் போட்டிக்கு ரெடியாக வந்தார். அப்போது தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
என்ன நடந்தது: கடந்த புதன்கிழமை மதியம் பள்ளி மைதானத்தில் மாணவர்கள் ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. சக மாணவர் வீசியோ ஈட்டி பாய்ந்த இந்த மாணவர் உயிரிழந்தார் என்பதை முதற்கட்ட விசாரணையில் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
பயிற்சியின் போது அந்த மாணவர் எறிந்த ஈட்டி தன்னை நோக்கி வருவதை டாவேர் கவனிக்கத் தவறிவிட்டார்.. அவர் ஷூலேஸை கட்ட கீழே குனிந்த நிலையில், ஈட்டி தலையில் பாய்ந்துள்ளது. ஈட்டி தலையில் பாய்ந்த நிலையில், தாவரே சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். ரத்த வெள்ளத்தில் இருந்த மாணவனை அருகில் இருந்தோர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை: இந்தச் சம்பவம் குறித்து கோரேகான் போலீசார் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஈட்டி எறிந்த மாணவர் மீது ஏதேனும் கவனக்குறைவு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். பள்ளி மற்றும் மைதானங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் இருந்து வீடியோவை சேகரித்த போலீசார், அந்தக் காட்சிகள் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவர் நொடிகளில் உயிரிழந்த சம்பவம் அங்குள்ள மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications